கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? - பட்டியலை தயார் செய்த திமுக!
திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? - விவரம் என்ன?
தவெக தலைவர் விஜய் திடீரென சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். விஜய் டிஜிபி அலுவலகம் சென்ற பின்னணி என்ன? யார் மீது புகார் கொடுத்தார்?

அப்துல் கலாமின் உதவியாளரான பொன்ராஜ் டிவி விவாதங்களிலும் யூடியூப் சேனல்களிலும் அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். தவெக குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோவில் கட்சியின் பெண்களை தரக்குறைவாக பேசியதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், விஜய்யும் 'என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என ட்வீட் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்த விஜய் பொன்ராஜூக்கு எதிராக புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், 'ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு.பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு.பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.மு.க. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைகடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.














