பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த ...
மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?
முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'
இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவட்ட கள நிலவரம்.!
1. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தங்கள் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக, சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழ்நாட்டின் முக்கிய மையங்களில் ஒன்றாக பெரம்பலூர் உள்ளது. அதோடு மக்காச்சோளம், பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

இதனுடன், மலைப்பாங்கான பகுதிகள் பல இருப்பதால் கல் குவாரிகளும் பெரும்பான்மையாக செயல்பட்டு மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்கிறது.
இந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், உடையார், முத்தரையர், வன்னியர், கவுண்டர்கள், ரெட்டியார், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எ ன்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் அடுத்தடுத்து பல சமூகத்தினர் உள்ளனர்.
இந்த தொகுதியின் தற்போதையை சட்டமன்ற உறுப்பினராக பிரபாகரன் இருந்து வருகிறார். மறுபடியும் அவர் சீட் கேட்கிறார். பெரிய அதிருப்தி இல்லை என்றாலும், இந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளியான ஆ.ராசா, வேறு நபரை வேட்பாளராக்க போகிறார் என்று ஆரம்பத்தில் பேச்சு அடிப்பட்டது.

ஆனால், பிரபாகரனை மறுபடியும் வேட்பாளராக்க அவர் ஆசி வழங்கிவிட்டதாக சொல்கிறார்கள். இவரை தவிர, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் ஜெயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ-வும், பெரம்பலுர் ஒன்றிய செயலாளருமான ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் தங்க.கமல் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் முந்தி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க வில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட பொருளாளருமான பூவை செழியன், முன்னாள் துணை சபாநாயகரும், கழக அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி ஆகியோர் சீட் பெறும் பட்டியலில் முதன்மையில் இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியையான ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் ஆளாக தொகுதியில் வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்.
த.வெ.க-வில் பெரம்பலூர் தொகுதி மாவட்ட செயலாளர் சிவா தான் வேட்பாளர் என்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள், கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்ட காரணிகளால் இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்கவே வாய்ப்பு அதிகம்.
2. குன்னம் சட்டமன்ற தொகுதி:
தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 - ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக குன்னம் பரிமளித்து வருகிறது. இந்த தொகுதியில், வன்னியர்கள், பட்டியலின மக்கள், உடையார், ரெட்டியார்கள், முத்தரையர், யாதவர், பிள்ளைமார், செட்டியார் மற்றும் இஸ்லாமியர்கள் என்று பல சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

விவசாயமே பிரதான தொழிலாக உள்ள தொகுதி என்பதால், பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் செந்துறை வட்டாரப் பகுதிகளில் பருத்தி, முந்திரி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், சுண்ணாம்பு கல் குவாரிகளும், சிமெண்ட் தொழிற்சாலைகளும் இந்த தொகுதி மக்களுக்கு பொருளாதார ஆதாரமாக உள்ளன.
இந்த தொகுதி எம்.எல்.ஏ-வாக கடந்த 2011 - 2016 - க்கு பிறகு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். மறுபடியும் இவருக்குத்தான் சீட் என்கிறார்கள். அவர், தொகுதியில் அதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க இந்த தொகுதியை கேட்டு வந்த நிலையில், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துதான் வேட்பாளர். ஆனால், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரை தவிர பலமான இரண்டாம் கட்ட மாநில நிர்வாகிகள் இல்லாதது மைனஸ். முழுக்க முழுக்க கூட்டணி கட்சியை நம்பி வேலை செய்ய வேண்டிய நிலை.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலோ அல்லது அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் முழு வீச்சில் இறங்கி வேலை பார்த்தாலோ மட்டுமே ஐ.ஜே.கே வேட்பாளரால் தி.மு.க வேட்பாளருக்கு டஃப் கொடுக்க முடியும் . நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கீர்த்திவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஊருக்கு முன்பாக முதல் ஆளாக வாக்குகள் சேகரித்து வருகிறார்.
த.வெ.க சார்பில் ரேவதி முத்தமிழ்செல்வன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.
களத்தின் பல்வேறு கூறுகளை ஆராயும்போது தற்போதைய சூழலில் உதயசூரியனே பிரகாசிக்கிறது.













