'திமிறிய கூட்டம்...லாக் ஆன பிரசார வாகனம்!' - விஜய்யின் எழும்பூர் பிரசாரம் ரத்தான பின்னணி!
தவெக தலைவர் விஜய் சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், எழும்பூரில் திட்டமிட்ட பாய்ண்ட்டுக்கு வராமல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார். விஜய் பிரசாரத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன?

தி.நகர் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா, எழும்பூர் ரித்தர்டன் சாலை ஆகியவற்றில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டிருந்தது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை வீட்டிலிருந்து மாலை 3:15 மணிக்கு கிளம்பிய விஜய் 4:15 மணிக்கு முதல் ஸ்பாட்டான முத்துரங்கன் சாலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு தி.நகரில் தவெக சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம் அருகே சுதந்திர தின பூங்கா பக்கம் வந்து ஆயிரம் விளக்கு தொகுதியின் தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரை தொண்டர்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இரண்டாவது பாய்ண்டை முடித்துவிட்டு எழும்பூர் ரித்தர்டன் சாலையை நோக்கி கிளம்பினார். வள்ளுவர் கோட்டம் ஹைரோடு பூந்தமல்லி ஹைரோடை பிடித்து ரித்தர்டன் ரோடுக்கு வந்து சேருவதுதான் விஜய்யின் திட்டம். அதன்படி, வள்ளுவர் கோட்டத்தை தாண்டியவுடனேயே எழும்பூர் வேட்பாளரான ராஜ்மோகன் விஜய்யின் வாகனத்தில் ஏறிவிட்டார். அவரை அறிமுகப்படுத்தியபடியே விஜய் ரித்தர்டன் சாலை நோக்கி வந்தார். மூன்றாவது பாய்ண்டை எட்டுவதற்கு 200 மீட்டர் மட்டுமே இருக்கையில், அந்த பாய்ண்டுக்கு செல்லாமல் அப்படியே நீலாங்கரை நோக்கி சென்றுவிட்டார்.

விஜய் ஏன் அந்த மூன்றாவது ஸ்பாட்டுக்கு செல்லாமல் சென்றார் என மாவட்டச் செயலாளர் பூக்கடை குமாரிடம் பேசினோம். 'ரித்தர்டன் சாலை மிக குறுகிய சாலை. அங்கே அதிகப்படியான மக்கள் கூடியிருந்தனர். தலைவரின் வாகனம் பாய்ண்டை நெருங்குவதற்கு முன்பே எல்லாரும் மெயின் ரோடுக்கு ஓடி வந்துவிட்டனர். இதனால் தலைவரின் வாகனத்தை மெயின் ரோடிலிருந்து ரித்தர்டன் சாலைக்குள் திருப்பிக் கொண்டு வர முடியவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்களே அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அந்த பாய்ண்டுக்கு செல்ல வேண்டாமென முடிவெடுத்து விட்டோம்' என்றார்.















