அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! - இது பொதுமக்களின் சாட்டை
Jananayagan: நிறையபேர் போன் பண்ணி வாழ்த்துறப்போ சந்தோஷப்பட முடியல - சீரியல் நடிகர் அருண்
''நிறைய நண்பர்கள்கிட்ட இருந்து போன் வந்துட்டே இருக்கு. 'தளபதி படத்துல நடிச்சிருக்கேன்னு சொல்லவே இல்லயேன்னு கோபிச்சுக்கிட்டாங்க. டிவிக்கு வந்து இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு. இதுக்கு முன்னாடி சில சினிமா வாய்ப்புகள் வர்ற மாதிரி வந்து கடைசியில கைகூடாமப் போயிருக்கு. அதனால 'ஜனநாயகன்' வாய்ப்பு வந்தப்ப அவ்வளவா வெளியில சொல்லல. முதல் படமே விஜய் சார் படம்கிறதே எனக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அந்த சந்தோஷத்தோடவே போய் நடிச்சேன். ஆனா...
கொஞ்சம் நிறுத்தி சில நொடி மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார் நடிகர் அருண். சீரியல் ஏரியாவில் அருண் ரொம்பவே சீனியர். சன், விஜய் உள்ளிட்ட முன்னணி சேனல்கள் அனைத்திலும் ஒளிபரப்பான பல முக்கிய சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

'ஜனநாயகன்' பட வாய்பு வந்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன சஞ்சலம் இருந்துச்சு. பெரிய ஹீரோ படம்கிறதால் நம்ம கேரக்டர் ரெஜிஸ்டர் ஆகுற அளவுக்கு இருக்குமா, ஸ்க்ரீன்ல ஹீரோகூட வருவோமா, நடிச்ச சீன் எடிட்ல தப்பிச்சு வருமான்னெல்லாம் நிறைய கேள்விகள் வந்து போயின. அதனால வீட்டைத் தாண்டி தகவலைச் சொல்லல. நெருக்கமான ஒருசிலருக்குத்தான் படத்துல நடிச்சேன்னு தெரியும்.
படம் வெளியாகவிருந்த சூழலுமே இன்னும் உற்சாகத்தைக் கூட்டுச்சு. அதனால ஷூட்டிங் முடிச்சு வந்த நாள்ல இருந்து படம் வெளியாகுறதைப் பார்க்க ரொம்பவே ஆர்வமா இருந்தேன்.
விஜய் சார் அரசியல் என்ட்ரி அரசியல் ஏரியாவுலயும் பெரிய தாக்கத்தை உண்டாக்க, 'முதல் படமே பெரிய மெமரியா இருக்குதே'ங்கிற மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு இருந்தது.
ஆனா படம் வெளியாவதில் பிரச்னை உண்டாகி, கடைசியில இப்ப வரை படம் திரையில் வரல.
இந்தச் சூழலில்தான் சில தினங்களுக்கு முன் படம் இணையத்தில் வெளியாகிடுச்சு. அதன் மூலம பார்த்தவங்கதான் போன் மேல போன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சினிமாவுல முதல் படத்தை தியேட்டரில் குடும்பம் ப்ளஸ் நண்பர்களோட போய் பார்க்கணும்னு காத்திருந்த சூழல்ல இப்படி ரிலீஸ் ஆனது ஒருபக்கம் நெருடலாகவும் இருக்கு. அதேநேரம் படத்துல என்னுடைய கேரக்டர் ரெஜிஸ்டர் ஆகியிருக்குனு நினைக்கிறப்ப மகிழச்சியாகவும் இருக்கு'' என்றவர், சினிமாங்கிறது ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கிற இடம். அதைத் தயாரிக்கிறவங்க லட்சக்கணக்குல பணத்தை முதலீடா போடுறாங்க. ஆனா கொல்லைப்புறமா அதைப் பார்க்கிறப்ப உங்களை மகிழ்விக்க அதுல வேலை செஞ்சவங்க, தயாரிச்சவங்க எல்லாருமே பாதிக்கப்படுவாங்க. அதனால பொறுத்தது பொறுத்துட்டீங்க, இன்னும் சில தினங்கள் காத்திருந்து படம் முறைப்படி ரிலீஸ் ஆனதும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கன்னு தமிழக மக்களையும் விஜய் சார் ரசிகர்களையும் கேட்டுக்கறேன்'' என்கிறார் அருண்.


















