`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, ...
திருச்செந்தூர்: திருக்கோயில் வளாகத்தில் ட்ரோன், ரீல்ஸ் எடுக்க தடை! - திருக்கோயில் நிர்வாகம்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்கள், விஷேச மற்றும் திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் செல்போன் மூலம் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வித்யாசமாக புகைப்படம் எடுப்பது, ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுப்பது, இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது போன்றவை அதிகரித்து வருகின்றன. கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகைதரும் பக்தர்களுக்கு கோயிலுக்குள்ளே செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதற்காக திருக்கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கோயிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்று போட்டோ, வீடியோ எடுத்து விடுகின்றனர். கடந்த மாதம், த.வெ.க நிர்வாகி ஒருவர் கோயிலுக்குள் வரிசையில் நின்ற பக்தர்களிடம் த.வெ.க கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டார். இதனையடுத்து அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த நாட்களில் திருமண வீட்டாருடன் வரும் புகைப்படக் கலைஞர்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி ட்ரோகளை பறக்க விட்டு வீடியோ எடுக்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்பில், “திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடவும், செல்போன் மற்றும் வீடியோ கேமராக்கள் மூலம் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்கள் எடுக்கவும் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அதேபோல், கோயில் வளாகத்தில் செல்போன் மூலம் வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகம், சண்முக விலாச மண்டபம், வசந்த மண்டபம், கோவிலுக்கு உள்ளே வரும் டோல்கேட் பகுதி, வட்டாட்சியர் அலுவலகம், தேரடி பகுதி என பல்வேறு இடங்களில் இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.





















