``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்
கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி சௌந்தர்யா என்ற மனைவியும், சன்மதி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த அவர், புலியூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் செல்வதற்காக ஸ்கூட்டியில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துகொண்டு நேற்று இரவு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

அப்போது, குளித்தலையை அடுத்த லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே கரூரிலிருந்து தனியார் டெக்ஸ்டைல் தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி மாவட்டம், தும்பலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த தனியார் டெக்ஸ்டைல் பேருந்து அதிவேகமாக வந்துள்ளது.
அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்று ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதி 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. இதில், பஸ்ஸின் அடியில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸார், அவர்களது உடலைக் கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, குளித்தலை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் போதிய குளிர்சாதன அறை இல்லாததால் அவர்களது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் டெக்ஸ் பஸ் டிரைவர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், பஸ் டிரைவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்தச் சம்பவத்தை அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து மேம்பாலம் முடியும் வரை சாலையில் எந்தவித மின்விளக்குகளும் இல்லை. கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது குறுகிய இருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருவதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்கூட்டி மீது தனியார் டெக்ஸ் பஸ் மோதிய விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















