விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலு...
விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!
த.வெ.க தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்கிற பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. இந்நிலையில் த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்திய சர்வேயில் த.வெ.கவுக்கு ஆதரவாக உள்ள தொகுதிகளை பட்டியலிட்டது. அதில் விஜய் போட்டியிட சாதகமான தொகுதிகள் குறித்தும் விவாதிக்கபட்டது. அதன்படி திருச்சி கிழக்கு, மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் நிற்பதற்கு சாதகமான தொகுதிகளாக கருதுகிறது த.வெ.க-வின் வியூக வகுப்பு நிறுவனம்.
இந்நிலையில் த.வெ.க வேட்பாளர்களுக்கான நேர்காணலில், “பெரம்பூர் தொகுதிக்கு அடிக்கடி நான் வருவேன்” என விஜய் பேசியிருக்கிறார். இதனால் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பே அதிகம் என த.வெ.க வட்டாரத்தில் பலமான பேச்சு உள்ளது. கிறிஸ்தவ வாக்குகளும் கணிசமான அளவில் பெரம்பூர் தொகுதியில் உள்ளது. அதே போல் திருச்சி கிழக்கு தொகுதிகயையும் விஜய் ஒரு சாய்ஸாக வைத்துள்ளார். அந்த தொகுதியிலும் கிறிஸ்தவ வாக்குகளும், விஜய் சார்ந்த சமூக வாக்குகளும் கணிசமாக உள்ளது.
பெரம்பூர்
விஜய் இரண்டு தொகுதிகளில் எதில் களத்தில் இறங்கினாலும், அவரை எதிர்த்து பலமான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளதாம். தற்போது பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வை சேர்ந்த ஆர்.டி.சேகர் உள்ளார். இவரை மீண்டும் நிறுத்தினால், விஜய்க்கு எதிராக தாக்குபிடிக்க முடியுமா? என்கிற விவாதம் அறிவாலயத்தில் நடக்கிறதாம்.
இதனால் தி.மு.க தலைமை வடசென்னையில் பலமாக உள்ள அமைச்சர் சேகர் பாபுவை பெரம்பூர் தொகுதியில் நிறுத்த வைக்கும் யோசனையில் உள்ளதாம். விஜய்க்கு எதிராக வாக்குகளை பெற சேகர் பாபு போன்ற ஒருவரால் மட்டுமே முடியும். கட்சியினரை விரட்டி வேலை வாங்குவதோடு, தாரளமாக செலவு செய்ய அவரை போன்ற ஒருவரால் தான் முடியும் என தி.மு.க தலைமை ஒரு கணக்கு போடுகிறது.

தற்போது துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள சேகர் பாபு வரும் தேர்தலில் அங்கு போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியை அவர் குறிவைத்திருந்த நிலையில், தலைமை அவரை விஜய்க்கு எதிராக களத்தில் இறக்க ஆலோசனை செய்துவருகிறது. ஆனால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சேகர் பாபு தரப்பு யோசிக்கிறது. சேகர் பாபுவை தாண்டி வலுவான வேட்பாளர் வடசென்னையில் இல்லையென தி.மு.க நினைக்கிறது. சேகர் பாபு போட்டியிட மறுத்தால் பிரபலான பெண் வேட்பாளரை நிறுத்தும் ஆப்சனும் தி.மு.கவிடம் உள்ளதாம்.
திருச்சி கிழக்கு
மற்றொருபுறம், திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போது இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். விஜய் அங்கு களம் இறங்கினால், இனிகோவையே வேட்பாளராக களம் இறக்க ஒரு டீம் முயற்சி செய்கிறது. ஆனால் அமைச்சர் நேரு தரப்பில் முக்கிய தொழில் அதிபர் ஒருவரை அங்கு நிறுத்த நினைக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அந்த தொழில் அதிபரை தனது சாய்ஸ்சாக நேரு தரப்பு முன் வைத்துள்ளது.
விஜய்க்கு எதிராக இப்போது தி.மு.க தனது வியூகத்தை வகுக்க ஆரம்பித்துள்ளது. விஜய் வெற்றிபெற கூடாது என இரண்டு தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவையும் போட்டுள்ளதாம் தி.மு.க தலைமை.!














