"என்னை LOVE பண்ண நாலு பேர் சண்டை போட்டதால" - Actress Kanchana Secret Reveals | S...
`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ - ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி
திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூகங்களுக்கும் ஆம்பூர் தொகுதி தி.மு.க-வில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை’ என்று ஆதங்கப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்.
இதுபற்றி, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்கள் சிலர் பேசுகையில், ``ஆம்பூர் தொகுதிக்குள் 2,12,631 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில், அதிகபட்சமாக பட்டியல் சமூக மக்கள் 26 சதவிகிதமும், அதற்கடுத்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் 24 சதவிகிதமும் இருக்கின்றனர். அடுத்ததாக, முதலியார் 16 சதவிகிதமும், வன்னியர் 14 சதவிகிதமும் பரவலாக வாழ்கின்றனர்.

ஆனால், வெறும் 7 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் நாயுடு சமூகத்துக்கே ஆம்பூர் தி.மு.க-வில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, சிட்டிங் எம்.எல்.ஏ-வான அ.செ.வில்வநாதனுக்கே மூன்றாவது முறையாக சீட் வழங்கும் எண்ணத்தில் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த முறை ஆம்பூர் தொகுதியைக் கேட்கிறது. ஆனால், எ.வ.வேலு மீண்டும் வாணியம்பாடி தொகுதியை எடுத்துக்கொள்ள முஸ்லீம் லீக்கை வற்புறுத்துகிறார். அந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து மூன்றாவது முறையாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லீம் லீக்கிற்கு ஆம்பூர் தொகுதி சாதகமாக இருக்கும் சூழலில், அமைச்சர் தடையாக நிற்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் செயலாகும்’’ என்கின்றனர் கொதிப்போடு.
இந்த விவகாரத்தால், ஆம்பூர் தொகுதி தி.மு.க கூட்டணி ஆட்டம் கண்டிருக்கிறது.















