சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் ...
`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
உரிமைத்தொகை குறித்து மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கோவை மாவட்டம், அன்னூரில் த.வெ.கவில் நடந்த மாற்றிகட்சியினர் இணையும் விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் மகளிர் உரிமைத்தொகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“தற்போது மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லை. அதனை படிப்படியாக சீரமைத்த பிறகே இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும். இப்போதைக்கு சாத்தியமில்லை” என சூசுகமாகப் பதிலளித்துவிட்டுக் கிளம்பினார். அவரின் இந்தப் பேச்சு இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில், விருதுநகர் நகராட்சியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் நிறைவில், “தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் மேடம்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “எனக்கு தொண்டை சரியில்ல” எனச் சொல்லிக் கொண்டே வேகமாக நடந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார்.

“சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே இப்படி பதில் சொல்வதா?” என, குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட வந்த தாய்மார்கள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர். அமைச்சர் ஜெகதீஸ்வரியின் மழுப்பல் கலந்த அலட்சியமான இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!
















