`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?'- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக...
அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?
கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
'ஆஹா... போர் முடிவுக்கு வருகிறது. பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைகிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிடப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைகிறது' என்று உலக நாடுகள் ஆசுவாசம் அடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்.
இது மீண்டும் போரின் தொடக்கமாக அமைந்துவிடுமோ என்கிற கேள்வி உலக நாடுகளின் மத்தியில் அச்சம் எழுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயும் இப்போது சமாதானம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகும், அமெரிக்கா, ஈரான் இடையே தாக்குதல் நடக்க என்ன காரணம் என்பதை ஐந்து பாயிண்டுகளில் இங்கே பார்க்கலாம்.
1. ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அணு ஆயுத உற்பத்தி பேச்சுவார்த்தை, ஹார்முஸில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுவது என அனைத்திற்கும் 60 நாள்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த 60 நாள்கள் காலக்கெடு என்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 'ஓட்டையாக' இருக்கிறது.
காரணம், '60 நாள்கள் வரை டைம் உள்ளது' என்பதுபோல இரு நாடுகள் நேரம் எடுத்துகொள்கின்றன. எதற்கும் உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த இடைவெளியில் தான் தாக்குதல் நடக்கின்றன.
2. லெபனான் உள்ளிட்ட எந்த மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் இருக்கக்கூடாது என்பது தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பாயிண்ட். இதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானுக்கு பிடிக்கவில்லை.
அதனாலும், ஈரானும், அமெரிக்காவும் முரண்படுகிறது.
இது ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மட்டும் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தான். ஆனால், ஈரான் போரை அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் கூட்டாக தொடங்கியதால், அமெரிக்கா இஸ்ரேலை லெபனான் தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது.

3. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான், அமெரிக்கா இடையே ஏற்படும் முட்டல், மோதலுக்கு மிக முக்கிய காரணம். ட்ரம்ப் அவ்வப்போது ஈரானை எதிர்த்து எதாவது சொல்லிவிடுகிறார். அது ஈரானுக்கு பிடிப்பதில்லை. அதற்கு பதிலடியாக ஈரான் எதிர்வினையாற்றுகிறது.
இதுவும் ஈரான், அமெரிக்கா இடையே இன்னும் தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம்.
உதாரணத்திற்கு, கடந்த 21-ம் தேதி ஈரான், அமெரிக்கா குழுக்களுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ட்ரம்ப் அமெரிக்காவில், "ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் மீண்டும் திறக்கவில்லை என்றால், அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும். அந்த நாட்டில் இருந்து வந்திருக்கும் பேச்சுவார்த்தைக் குழு கடத்தப்படும்" என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இது உடனே ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாஃப் காதுகளுக்கு எட்டவே, குழு புகைப்படத்தில் கலந்துகொள்ளாமல், பாதியிலேயே பேச்சுவார்த்தை நிகழ்வில் இருந்து கிளம்பினார்.
4. இஸ்ரேல் லெபனானிலும், ட்ரம்ப் வார்த்தைகளிலும் விளையாடுவது போல, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து விளையாடுகிறது.
ஹார்முஸ் பொதுவான நீர்ச்சந்தி ஆகும். தங்களுக்காக ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறப்பதும், மூடுவதுமாக இருப்பது உலக நாடுகளுக்கு நெருக்கடியாக மாறுகிறது.
அமெரிக்கா ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உறுதி அளித்திருப்பதால், ஈரான், அமெரிக்கா இடையே தாக்குதல் நடக்கின்றன.

5. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஈகோவும் இந்தப் போர் முடியாததற்கு மிக முக்கிய காரணம். அமெரிக்காவிற்கு நவம்பர் மாதம் வருகிற தேர்தலால் அது போரை விரைவில் முடித்துவிட வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பது ஈரானுக்கு நன்கு புரிகிறது.
இதை வைத்து ஈரான் பல இடங்களில் விட்டுக்கொடுக்காமல் தன் பிடியை இறுக்குகிறது.
அமெரிக்காவோ தாங்கள் விட்டுக்கொடுத்ததாக இருக்கக்கூடாது என்று பல இடங்களில் இறுக்கமாக இருக்கிறது. இதுவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது.
















