நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க...
நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்
பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க உரிமைக் கோருதல்... ரிப்பீட்டு - இதுதான் தவெக தலைவர் விஜய்யின் கடந்த வார ரோட்டீனாக இருந்தன.
இவை அத்தனையையும் சமாளித்து, நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக 'ஜோசப் விஜய் எனும் நான்' என்று வெற்றிகரமாகப் பதவியேற்றுவிட்டார்.
ஆனால், இப்போதும் அவரால் 'அப்பாடா' என்று பெருமூச்சு முடியாது. அடுத்தொரு மிகப்பெரிய டெஸ்ட் அவருக்கும், அவரது கட்சிக்கும் காத்திருக்கிறது. அதுதான் நாளை மறுநாள் (மே 13) நடக்க உள்ள பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு'.

120 தொகுதிகள்...
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்ததோடு, தவெகவிடம் மொத்தம் 107 தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு சீட் சபாநாயகருக்குச் சென்றுவிடும். இன்று போட்டியின்றி தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை நிரூபிக்க 118 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு என தவெகவிடம் தற்போது 120 தொகுதிகள் உள்ளன.
இவற்றில் காங்கிரஸைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளுமே 'வெளியில் இருந்து ஆதரவு' என்றுதான் தெரிவித்துள்ளன.
ஒரு கட்சியின் பெரும்பான்மை மீது சந்தேகம் எழும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும். அந்த நிலைதான் தற்போது தவெக கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். அதில் தவெகவிற்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றனர் என்பது எண்ணப்படும்.
இந்த வாக்கெடுப்பில் மூன்று வகைகள் இருக்கின்றன.

ஒன்று, துண்டு சீட்டில் ரகசியமாக நடத்தப்படும் வாக்கெடுப்பு. இரண்டாவது, குரல் வாக்கெடுப்பு. வாய்மொழியாக யார், யார் ஆதரவு என்று தெரிவிக்கப்படும். மூன்றாவது, எலெக்ட்ரானிக் வாக்கெடுப்பு. இந்த வகைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படும்.
துண்டு சீட்டு வாக்கெடுப்பு, எலெக்ட்ரானிக் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளுக்குப் பெரிதாக நம்பிக்கை இருக்காது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பாலான சாய்ஸ், 'குரல் வாக்கெடுப்பு'.
இந்த வாக்கெடுப்பின் போது, சில எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.
உதாரணத்திற்கு, தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 7 பேர் நாளை மறுநாள், 'ஆப்சென்ட்' ஆகினால், மீதம் இருக்கும் 226 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வாக்கெடுப்பில் முதலில் சபாநாயகர் கலந்துகொள்ள மாட்டார். ஒருவேளை, பெரும்பான்மை நிரூபிப்பதில் 'டை (Tie)' ஏற்பட்டால், சபாநாயகரின் வாக்கு கணக்கில் கொள்ளப்படும்.

பெரும்பான்மை கிடைக்காவிட்டால்...
ஒருவேளை, இந்த வாக்கெடுப்பில் விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவர் அவருடைய முதலமைச்சர் பதவியை உடனே இழக்க வேண்டியதாக இருக்கும்.
'இழக்க' வேண்டியதாக இருக்கும் என்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்பதெல்லாம் இல்லை.
ஆளுநர் அடுத்ததாக அதிக தொகுதிகளை வைத்திருக்கும் அரசியல் கட்சியைப் பெரும்பான்மை நிரூபிக்க அழைப்பார்.
எந்தக் கட்சியாலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாவிட்டால், ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்துவிடுவார்.













