கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்; டூ- வீலரில் அண்ணாமலை, எஸ்.பி.வேலுமணி வேட்பு...
நிழலாய் நின்ற நினைவுகள்: பல்லடம் இலட்சுமி மில் பள்ளியின் பொற்காலம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை பல்லடம் இலட்சுமி நூற்பாலை நடுநிலைப் பள்ளியில்படித்தேன்.அந்தஆரம்பகால பள்ளியையும் அப்போதிருந்த ஆசிரியப் பெருமக்களையும் அதன் சுகந்தமான நினைவுகளையும் என்றும் மறக்கமுடியாது. முதல்வகுப்பின்மேரிடீச்சர். குண்டாகவும் அழகாகவும் அதைவிட அன்பாகவும் இருப்பார். அவர் முகத்தில் பூசி வரும் பவுடரின் வாசத்திற்காகவே அவரருகில் அடிக்கடி சென்று நிற்பேன்.உடனே சிலேட்டில் எழுத்துகளை எழுதி பின்பக்கத்தில் அதேமாதிரி எழுதச் சொல்வார். இது அடிக்கடி நடந்ததால் டீச்சருடனான பிடிப்புடன் எழுத்தின் மேல் பற்றுதலும் அதிகமானது.
என் மேலுள்ள அவரது பிரியமும் கூடியது. இதனால் அதே வகுப்பில் படித்த அவரது மகனுக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் அவனிடம் கிள்ளு வாங்குவேன்.
டீச்சரின் அன்புக்கு முன்பு இதெல்லாம் பெரிய வலியல்ல.மேலும் இதற்காக அவன் டீச்சரிடம் அடி வாங்குவதும் சந்தோஷமாகஇருக்கும்.இரண்டாம் வகுப்பிலும் அவரே இருந்ததால் மகிழ்ச்சி தொடர்ந்தது. பள்ளியில் ஆண்டு விழாக்கள் தவறாதுநடக்கும்.அதற்காக மேரி டீச்சர், சரோ டீச்சர், வனஜா டீச்சர் ,பேபி வார்டு பத்மா டீச்சர், பொன்னுசாமி சார் ,சீனிவாசன் சார், ராமசாமி சார் ,சுப்பிரமணியம் சார்,மௌன குருசாமி சார் ,அதன் பின்னாடி வந்த லட்சுமிடீச்சர், ஜெயமேரி டீச்சர், காணிக்கை மேரி டீச்சர், ட்ரில் மாஸ்டர் செல்ல முத்து சார் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பார்கள்.

மாணவர்களின் நிகழ்ச்சிகள் சூப்பராக அமைய அவர்களது உழைப்புதான் காரணமாக இருந்தது. நடனம் , நாடகம் ,பாடல் சொற்பொழிவு, மாறுவேடப் போட்டி என தூள் பறக்கும்.ஒத்திகைகளின் போது நாங்கள் சோர்ந்துவிடாமலிருக்க மில் கேன்டீனில் இருந்து உணவு தருவித்துத் தருவர்.
நிகழ்ச்சிகளுக்கான உடைகளையும் உபகரணங்களையும் (மயில், பொய்க்கால் குதிரை, கிரீடங்கள் ,கத்தி, உடைகள் ,குடை இன்னும் பல)அவர்களே தயார் செய்வார்கள்.பாடல், நடனம் ,பேச்சு ,நாடகம் அனைத்திற்கும் அவர்களே தான் திரைக்கதை வசனம் எழுதிஇயக்குவார்கள். அவர்களின் மேற்பார்வையில் இயங்குவது எங்களுக்கு பேரானந்தமாக இருக்கும்.
மூன்றாம் வகுப்பிலிருந்து புத்தகங்கள் மூலம்நடத்தப்பட்ட பாடங்கள் எங்களின் வளர்ச்சிக்கு படிக்கற்களாக அமைந்தன.
பாடத்துடன் ஓவியம், பள்ளித்தோட்டம், பள்ளியின் உட்புறம் வெளிப்புறம் தூய்மை காத்தல் ,குடிநீர் பிடித்து வைத்தல் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரித்தல் போன்றவற்றிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் வழிகாட்டுதலுடன் கூடிய கூட்டமைப்பு தொடர்ந்தது.
படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளும் நடத்தப்பட்டன.
தினம் ஒருவர் செயதித்தாள்களில் வந்த முக்கிய நிகழ்வுகளை காலை நேரப் பிரார்த்தனை முடிந்தவுடன் எழுதி வந்து வாசிப்பதுவழக்கமாகஇருந்தது.எல்லா ஆசிரியர்களும் எல்லாப் பாடங்களையும் பயிற்றுவிக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் மாணவர்களும் வகுப்பு பேதமின்றி பாடங்களில் ஐயப்பாடுகளை தெளிவு படுத்திக்கொள்ள இலகுவாக இருந்தது.

விளையாட்டுப் போட்டிகளும் கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி மற்றும் நினைவாற்றல் போட்டிகளும் வருடம் தவறாமல் முறையாக நடக்கும்.அதற்கான பரிசுகள் ஆண்டு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
வாரந்தோறும். கூட்டுப் பிரார்த்தனை
நிகழ்வுகள் நடக்கும். அதற்கான பூமாலை வகைகள் பூஜைக்குரிய பொருட்கள் போன்றவற்றை நாங்களே தயார் செய்வோம்.
சில சமயம் வெளியிலிருந்து பெரியவர்கள்,
சிலசமயம் ஆசிரியர்கள் ,சிலசமயம்
மாணவர்களில் சிலர் என தலைமை தாங்குதல் இருக்கும்.
போதுமான வழிகாட்டுதலும் பாதுகாப்பும் அப்போதைய ஆசிரியர்களால் எங்களுக்கு கிடைத்தது.ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் பாடநூல்கள் சேகரிக்கப்பட்டு (உரியவர் விருப்புடன்) நூல்கள் வாங்க இயலாதவர்களுக்கு வழங்கப்படும்.
ஜெமினி சர்க்கஸ், விலங்குகள் பூங்கா , ரயில்வே ஸ்டேஷன் ஏர்போர்ட், காந்தி, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜசோழன் போன்ற திரைப்படங்கள் மற்றும் ஒருநாள் சுற்றுலா, மேஜிக் நிகழ்ச்சிகள் என நிறையவே அனுபவித்தோம்.
இதற்கெல்லாம் மகுடமாக நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான்கு நாட்கள் சுற்றுலாவாக மதுரை, திருப்பரங்குன்றம், ராமேஸ்வரம், திருச்செந்தூர்,எட்டயபுரம், கயத்தாறு ,தென்காசி, குற்றாலம் நாகர்கோவில், கன்னியாகுமரி என அழைத்தசென்றனர். (சுற்றுலா கட்டணத்துக்குப் பணம் குறைய பலகாலம் பாதுகாத்து வைத்திருந்த சினிமா நடிகர் R.S.மனோகரிடம் கையெழுத்துவாங்கிய ஐந்து ரூபாயை அண்ணன் தந்தது மறக்கமுடியாது) இலட்சுமி மில் பள்ளிப் பேருந்து(உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பேருந்து)எங்களின் பல்லக்கு ஆக மாறியிருந்தது.
உணவுக்கும் தங்குவதற்கும் ஆங்காங்கே ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கோவில்பட்டியில் கடலைமிட்டாயும் சீடையும் உணவும் சீனிவாசன் சார் வீட்டிலிருந்தும்,
எட்டயபுரத்தில் காராசேவும் சுசியம்அச்சு முறுக்கும் உணவும் பொன்னுசாமி சார் வீட்டிலிருந்தும் வழங்கப்பட்டது.குற்றாலத்தில் லட்சுமி மில் விருந்தினர் விடுதியில் தங்கினோம். நான்கு நாட்களும் நாங்கள் மனச்சோர்வும் உடற்சோர்வும் அடையாமல் தாயும் தந்தையுமாக மாறி எங்களைக் கவனித்துக் கொண்டனர்.
தலைவாரிவிட்டு உடைகளை சரியாகப் போடச் செய்து வேளைக்கு உணவு தந்து கண்காணிப்புடன் எல்லாத் தலங்களிலும் guide ஆக மாறி எங்களுக்கு சுற்றிக்காட்டி விளக்கி மகிழ்வித்தனர்.
மாணவர்களுடன் சேர்ந்து வாடா பங்காளி என்று கூவி சார்களுடன் டீச்சர்களும்(பஸ் டிரைவரும் கூட)ஆடியது உற்சாகமாக இருந்தது.
கன்னியாகுமரியில் அதிகாலையில் சூரிய உதயம் காண செல்வதற்கு எங்களை எழுப்புவதற்கு ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கலைடாஸ்கோப் வாங்கித் தருவதாக உறுதி அளித்து அழைத்து சென்றனர்.
கடற்கரையில் மேலும் நாங்கள் விரும்பிய பொருட்களையும் வாங்கித் தந்து மகிழ்வித்தனர். சுசீந்திரத்தில் அனுமார் சிலைக்கு சாற்றக் கொடுத்த வெண்ணெயை மாணவர்களில் சிலர் உண்டது வேடிக்கையாக இருந்தது. பெற்றோருடன் சுற்றுலா சென்றதைப் போன்ற உணர்வை (ஏன் அதை விட மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் பெற்ற)நாங்கள் பெற்றோம்.

தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் இல்லாத காலத்தில் பக்குவமாக எங்களைக் கூட்டி வந்து வீடு சேர்த்தனர். பெற்றோர்கள் மறுநாள் பள்ளிக்கு வந்து நன்றி தெரிவித்தனர்.
எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் எங்கள் எல்லோரையும் ராமசாமி சார் தான் கூட்டிச்சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உயர்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார்.மறுநாள் தான் பெற்றோர் வந்து கையெழுத்து போட்டனர்.
உயர்நிலைப் பள்ளிக்கு சென்றாலும் அடிப்படை சந்தேகங்களை மீண்டும் இங்கு வந்து தான் தெளிவுபடுத்திக் கொள்வோம். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி ,பல்கலைக்கழகங்களுக்கு சென்று கல்வி பயின்று இருந்தாலும் அந்த ஆரம்பக் கல்வியும் அந்தப் பள்ளியில் கல்வி பயின்றநிறைவும் எங்கும் என்றும் கிடைக்கவில்லை.
இப்போது எத்தனையோ வெளியூர் , வெளிமாநில, வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா சென்று வந்த போதிலும் சிறு பிராயத்தில் அன்று பெற்ற அந்த ஆனந்தமும் ஆர்ப்பாட்டமும் மறையவில்லை.
என்றென்றும் மனதில் சுழன்றடிக்கும் அலையாக அந்த ஆரம்பகால கல்வியும், பள்ளியும் ,ஆசிரியப் பெருமக்களும், மகிழ்ச்சிப் பெருக்குடன் துள்ளித்திரிந்த நாட்களும் காலத்தால் அழியாதவை . நெஞ்சில் காத்து மகிழ அழகானவை. கலையாத நினைவுகளாய் நிலையானவை. இத்தகைய உயர்ந்த மேதகு மனிதர்களை ஆசிரியர்களாகப்பெற்ற எங்களது பெரும்பேறு வேறு யாருக்கேனும் கிட்டுமோ இவ்வுலகில்?!
-நீலவேணி தேவராஜன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
















