"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் ...
'பா.ம.க உங்கள் குடும்ப சொத்து அல்ல' டு `உறுதிக்கொடுத்த த.வெ.க; திருமா விரைவில்.!' |கழுகார் அப்டேட்ஸ்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ம.க-வில் நிலவிவந்த தந்தை - மகன் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ராமதாஸும் அன்புமணியும் ஆரத்தழுவி ஒன்றிணைந்ததை மனதார வரவேற்பதாக சேலம் அருள் உள்ளிட்ட ராமதாஸ் அணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், மனதுக்குள் வேறு ப்ளான் வைத்திருக்கிறார்களாம்.
சேலம் பா.ம.க-வினர் மட்டுமின்றி சென்னை, கடலூர் என பல பகுதிகளிலும் இருந்தும் ராமதாஸ் ஆதரவாளர்களை சந்தித்துவருகிறாராம் அருள். அதிருப்தி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 'பா.ம.க உங்கள் குடும்ப சொத்து அல்ல' என சர்ச்சையைக் கிளப்பவுள்ளனராம்.

மேலும் 'ராமதாஸ் நம்மை நடுத்தெருவில் விட்டுவிட்டார், அன்புமணியோ நம்மை வஞ்சம் வைத்து பழித்தீர்த்துவிடுவார். ஆகையால் பா.ம.க-வில் தொடர்வது சரியாக இருக்காது' என முடிவெடுத்திருக்கிறது அந்த படை. ஆகையால், 'ஆளுங்கட்சிக்கு பக்கம் போவதா அல்லது எதிர்கட்சி பக்கம் தாவுவதா' எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அருள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள். 'அன்புமணியை பகைத்துக் கொள்ள முதல்வர் அலுவலகம் விரும்பாததால் பா.ம.க-வினர் தேனாம்பேட்டை பக்கமே வந்து சேருவார்கள்...' என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜனை தோற்கடித்தார் த.வெ.க-வின் முஸ்தபா. பிரசாரத்துக்கே சரிவர வராதவர், எம்.எல்.ஏ ஆன பிறகும் தொகுதி பக்கமே வராமல் சென்னையிலேயே இருக்கிறாராம். அவருக்கு பதிலாக தொகுதி பிரச்னைகளை கேட்டறிவதற்காக கட்சி நிர்வாகிகளை முஸ்தபா நியமித்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த மதுரை மேற்கு தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தங்கபாண்டி, தன்னுடைய மகன் சஞ்சய்யை முஸ்தபாவின் பி.ஏ.வாக சேர்த்துக் கொள்ளும்படி கேட்டதாகச் சொல்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.
அதற்கு முஸ்தபா மறுக்கவே, தங்கபாண்டி டென்ஷனாகிவிட்டாராம். அதைத்தொடர்ந்து, 'தொகுதி தொடர்பான கட்சி நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ பெயரே போடக் கூடாது' எனக் கட்சி நிர்வாகிகளுக்கு கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம். இதற்கிடையே, மதுரை மத்தி தொகுதி ம.செ பொறுப்பை முஸ்தபா பெற முயல்வதால், மதுரை த.வெ.க-வில் களேபரம் வெடித்திருக்கிறது.
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயமான பெண் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டர்கள் இடமாறுதலுக்கு பணம் வாங்கி முன்னாள் கமிஷனருக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம் உயரதிகாரிகள் விசாரித்தபோது, உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால், ஓட்டுமொத்தமாக அனைவரையும் மாற்ற தற்போதைய கமிஷனர் முடிவு செய்திருக்கிறாராம்.
இந்தத் தகவல் தெரிந்ததும், உளவுத்துறையிலிருக்கும் பெருமாள் பெயர்கொண்டு அதிகாரி விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாராம். இந்தச்சூழலில், தனக்கு கீழ் யாரெல்லாம் பணியாற்ற வேண்டும் என்ற லிஸ்ட்டையும் டி.ஜி.பி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் தற்போதைய தாம்பரம் கமிஷனர் பிமோனந்த் சின்கா. அவருடைய விசுவாசியான ஆவடி கூடுதல் கமிஷ்னர் ஒருவர் தாம்பரத்துக்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்.
'தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுகிறோம்' என ஐ.யூ.எம்.எல்., இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், 'தி.மு.க-வுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை' என அறிவிக்க ஆயத்தமாகிறாராம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

த.வெ.க-வின் தோழமை கட்சிகள் கூட்டத்திற்கான அழைப்பிதழைக் கொடுக்க, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சென்றிருந்தபோது, 'உங்களை தவிர எல்லோருமே தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்கள்.
நீங்களும் அறிவித்துவிடுங்கள். த.வெ.க கூட்டணியில் வி.சி.க-வுக்கான அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்படும்' என கேட்டுக் கொண்டார்களாம். கூடுதலாக, இரண்டு வாரியத் தலைவர் பொறுப்பும் உள்ளாட்சித் தேர்தலின்போது இரண்டு மேயர் பொறுப்பும் நிச்சயம் தரப்படும் என வாக்குறுதியும் கொடுத்துச் சென்றார்களாம்.
அ.தி.மு.க துணை பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி பழனிசாமி நியமித்தாலும், அவரது பழைய பதவியான கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் என்பது இரண்டாகப் பிரிக்கப்பட்டு, எஸ்.பி.வேலுமணியின் போட்டியாளர்களான செ.ம.வேலுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்டப் பொறுப்பை தராமல் மாநிலப் பொறுப்பை மட்டுமே எடப்பாடி கொடுத்திருப்பதால் வெகுண்டெழுந்த வேலுமணி, 'பொறுப்பை நான் ஏற்கப்போவதில்லை.. என்னுடன் வந்தவர்களுக்கும் பொறுப்பும் கொடுங்கள்' என ஆவேசமாக பொதுவெளியிலேயே பேசியிருக்கிறார்.
'த.வெ.க-வுக்கு சென்றுவிட வேண்டும்' என அவரது ஆதரவாளர்கள் சொன்னாலும், கட்சி மாறும் முடிவை வேலுமணி இன்னும் எடுக்கவில்லை. அ.தி.மு.க-வில் இருந்துகொண்டே எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து, கட்சியை ஒரு நபர் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும் என நினைக்கிறாராம் வேலுமணி.
இதுவரை நடந்த களேபரங்கள் போதாதென மீண்டுமொரு கலகத்துக்கு தயாராகிறது அ.தி.மு.க!















