செய்திகள் :

புதுச்சேரி: `சிலிண்டர்கள் இல்லை’- கைவிரிக்கும் ஏஜென்சிகள்.. அச்சத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?

post image

`எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை செய்தது...’

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ், இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

ஆனாலும் தற்போது வரை சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

இந்த நிலையில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில், `புதுச்சேரி முழுவதும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக, அறிவிக்கப்படாத தகவல்கள் பரவுவதாக அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறது.

அப்படியான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்றும், நுகர்வோர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றன.

செயலிழந்த `டோல்ஃப்ரீ’ எண்

அதனால் புதுச்சேரியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை என்றும், பொதுமக்கள் தேவையின்றி பதற்றம் அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்வதற்கு டோல்ஃப்ரீ எண்ணில் முயற்சி செய்தால், அந்த எண் வேலையே செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

குறிப்பிட்ட ஏஜென்சிகளுக்கு நேரில் சென்று கேட்டால், ``போர் நடப்பதால் சிலிண்டர் வரவில்லை. வந்தால் சொல்கிறோம்’ என்று மக்களை விரட்டுகின்றனர் அதில் பணிபுரியும் ஊழியர்கள். புதுச்சேரி நகரப் பகுதியில் இருக்கும் இண்டேன் ஏஜென்சிக்கு நாமே நேரில் சென்று விசாரித்தோம்.

புதுச்சேரி அரசின் செய்திக்குறிப்பு

அப்போது, ``போர் காரணமாக சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. லோடு வரவில்லை” என்று கூறியதுடன், டோல்ஃப்ரீ எண்ணுக்கு பதிலாக 8454955555 என்ற ஒரு எண்ணை கொடுத்தனர். அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புக்கிங் ஆகும் என்றனர்.

ஆனால் அந்த எண்ணும் வேலை செய்யவில்லை. அதேபோல தவளக்குப்பத்தில் இருக்கும் பாரத் பெட்ரோலியம் ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சிலிண்டர் சப்ளை இல்லை என்று தெரிவித்தனர்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஏஜென்சியில் கேட்டபோது, `தொடர்ந்து முயற்சி செய்து எப்படியாவது மிஸ்டு கால் கொடுங்கள். ஒரு வாரத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் எங்களிடம் இப்போது சிலிண்டர்கள் இல்லை’ என்று தெரிவித்தனர்.  

சிலிண்டர்கள் பதுக்கப்படுகிறதா...?

இது குறித்து புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் விவகாரங்கள் துறை இயக்குநர் முத்து மீனாவிடம் கேட்டபோது, ``டோல்ஃப்ரீ எண்ணில் சிலிண்டர்கள் புக்கிங் செய்ய முடியாததற்கு காரணம், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முயற்சிப்பதால்தான்.

அதற்கு டெக்னிக்கல்தான் காரணமே தவிர, சிலிண்டர் தட்டுப்பாட்டால் இல்லை. போதுமான சிலிண்டர்கள் கையிருப்பில் இருக்கிறது. விநியோகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தேவைப்படும் மக்கள் மட்டும் நிதானமாக முயற்சி செய்தால், அனைவருக்கும் சிலிண்டர்கள் கிடைக்கும். நேற்று ஒரு ஏஜென்சிக்கு மட்டுமே ஒருநாளில் 3,000 அழைப்புகள் சென்றிருக்கின்றன. அனைத்து ஏஜென்சிகளுக்கு ஒரே சர்வர்தான். அதனால் ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்னைதான் இது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு சிக்கல் இருக்கலாம். ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்தில்தான் இருக்கிறது. அந்த வகையில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்தான் என்பதால், அங்கும் எந்த பாதிப்புகளும் இல்லை” என்றவரிடம், `தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறீர்கள்.

ஆனால் போர் காரணமாக சிலிண்டர்கள் லோடு வரவில்லை என்று ஏஜென்சிகள் கூறுகின்றனவே…’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு, ``அப்படி சொல்வதற்கு வாய்புகளே இல்லை” என்றவர், ஏஜென்சியின் பெயரை சொல்லுங்கள் என்றார்.

ஏஜென்சியின் பெயரை நாம் சொன்னதும், ``எண்ணெய் நிறுவனத்திடம் பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன்” என்றார். அதன்பிறகு அவர் நம்மை அழைக்கவில்லை. நம் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.

அரசு சொல்வது உண்மையாக இருந்தால் ஏஜென்சிகளால் சிலிண்டர்கள் பதுக்கப்படுகிறதா ? அல்லது தட்டுப்பாட்டை மறைக்க அரசு முயற்சி செய்கிறதா ?

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.அறிவாலயம்கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமு... மேலும் பார்க்க

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்ட... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? கையிருப்பு இருக்கிறதா? - தமிழக பெட்ரோலிய வணிக சங்கத் தலைவர் விளக்கம்

ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்ட... மேலும் பார்க்க

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ... மேலும் பார்க்க