"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா...
Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!
அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை தொங்கியதை பார்க்க முடிந்தது.

ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவுக்கு இறக்குமதியாக வேண்டிய எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர்.
அதேமாதிரி, தமிழகத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை எனவும் 21 நாடுகளுக்கு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் கே.பி.முரளி பேட்டியளித்திருந்தார். ஆனால், இன்று சென்னை மவுண்ட் ரோட்டில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலும் CNG கேஸூம் ஸ்டாக் இல்லை என அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டு பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கிறது.

தேனாம்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் பெட்ரோல் கிடைக்கும் என விநோதமாக ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருக்க, வாகன ஓட்டிகள் தங்களின் நண்பர்களுக்கு அந்த பெட்ரோல் பங்கின் லொகேஷனை பகிர்ந்து சென்ற சம்பவங்களையும் பார்க்க முடிந்தது.
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. மக்களே உஷாராக இருங்கள் என பதற்றமடையச் செய்யும் வகையில் நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் வீடியோக்களும் செய்திகளும் பரவி வந்தன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் மக்கள் பெட்ரோல் பங்குகளை மொய்க்கத் தொடங்கினர். தமிழகத்தின் பல ஊர்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பிச் சென்றதை பார்க்க முடிந்தது. இந்த 'Panic Buying' காரணமாகத்தான் பெட்ரோல் பங்குகளில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.




மக்களின் அன்றாடத்தைப் பாதிக்கும் வகையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசுத் தரப்பில் முறையான விளக்கம் கொடுத்து பதற்றத்தைத் தணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்














