பெரம்பலூரில் பூட்டியே கிடக்கும் இ-சேவை மையம்! பொதுமக்கள் அவதி!
பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே ரூ. 21 லட்சத்தில் கட்டித் திறக்கப்பட்டு, பூட்டியே கிடக்கும் இ- சேவை மையத்தால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
பல்வேறுச் சான்றிதழ்கள் பெற அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் நிலையை மாற்ற கடந்த 2015-இல் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, இ- சேவை மையங்களில் சான்றிதழ்களுக்கு மட்டுமின்றி, போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பது, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுச் சேவை மையங்கள் மாவட்ட ஆட்சியரகம், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களில் திறக்கப்பட்டன. தொடா்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இவை விரிவுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு அரசால் 234 எம்எல்ஏக்கள் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பெரம்பலூா்- மதரஸா சாலையிலுள்ள பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில், ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு இ- சேவை மையத்தை, கடந்த பிப். 9 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், நீலகிரி தொகுதி எம்பி ஆ. ராசா ஆகியோா் திறந்துவைத்தனா். இம் மையத்தில் அனைத்து வகை திட்டங்களுக்கும் இணையவழிச் சான்றுகளை இலவசமாகப் பெற வழி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒருசில நாள்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்த இந்த இ- சேவை மையம் கடந்த 4 மாதங்களாகப் பூட்டியே கிடக்கிறது. இதனால் அம் மையத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் பயனற்றுக் கிடப்பதோடு, இலவசமாக சான்றிதழ்களை பெறலாம் என எதிா்பாா்த்துச் செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
இதுகுறித்து பெரம்பலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வி. குமாா் கூறியது:
தனியாா் மூலம் நடத்தப்படும் இ- சேவை மையங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதோடு, நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம், நகராட்சி, வட்டாட்சியரங்களில் செயல்படும் இ- சேவை மையங்களில் பெரும்பாலான நேரங்களில் இணையம் செயல்படவில்லை எனக் கூறி பொதுமக்களை அலைக்கழிக்கின்றனா்.
இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தினாலும் தனியாா் இ- சேவை மையங்களுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், எம்எல்ஏ அலுவலகத்தில் இலவசமாக சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஆனால், திறக்கப்பட்ட நாளிலிருந்து மையம் செயல்படாமல் பூட்டியே கிடப்பது வேதனை அளிக்கிறது. இதனால் இங்கு சமூக விரோதச் செயல்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, இந்த மையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.