நான்காவது முறையாக கொளத்தூரில்... வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரத்தைத் தொடங்கிய...
`பெரிய அலை இழுத்துசென்றது' - ஒடிசா கடற்கரையில் படப்பிடிப்பின் போது கடலில் மூழ்கி உயிரிழந்த நடிகர்
மேற்கு வங்கத்தில் டிவி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ராகுல் அருணோதய் பானர்ஜி. இவர் அதிக அளவில் டிவி தொடர்களில் நடித்து வந்தார். புதிதாக போலே பாபா பார் கரேகா என்ற டிவி தொடரில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு ஒடிசா மற்றும் மேற்கு வங்க எல்லையில் உள்ள ஒடிசாவில் உள்ள தலசேரி கடற்கரையில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ராகுல் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அந்த டிவி தொடரின் இயக்குனர் சுபாசிஷ் கூறுகையில், ''நாங்கள் முட்டளவு தண்ணீரில் தேனிலவு காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ராகுலுடன் நடித்த நடிகை ஸ்வேதா கடல் அலையால் சற்று பயந்துவிட்டார்.

எனவே ஸ்வேதா தண்ணீரில் இருந்து வெளியில் வர முடிவு செய்தார். ஆனால் ராகுல் இரண்டாவது ஷாட் எடுக்கவேண்டும் என்று கூறி ஆழமான பகுதிக்கு சென்றார்.
தண்ணிரில் இருந்து வெளியில் வந்துவிடுங்கள் என்று படப்பிடிப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்நேரம் மிகப்பெரிய அலை ஒன்று வந்தது. அந்த அலை ராகுலை உள்ளே இழுத்துச்சென்றுவிட்டது. நாங்கள் அனைவரும் உள்ளே குதித்து அவரை மீட்க முயற்சி செய்தோம். அங்கிருந்த லைஃப்கார்டுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். செல்லும் வழியில் இரண்டு முறை அவரது உடலில் அசைவு இருந்தது. ஆனால் மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார்''என்றார்.
இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் கூறுகையில், `மாலை 6 மணிக்குத்தான் ராகுலை கொண்டு வந்தார்கள். அவரை சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார்' என்றார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து படப்பிடிப்புதளத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைவர் முன்னிலையில் ராகுல் கடலில் மூழ்கி இறந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் 2009 ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் திரைப்படமான "சிரோடினி துமி ஜெ அமர்" மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து அவர் தனது சக நடிகையான பிரியங்கா சர்க்காரை மணந்தார், அவர்களுக்கு 13 வயது மகன் உள்ளார். ராகுல் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.



















