விசிக: "எமது கோரிக்கைகளை அரசாணைகளாக மாற்றிய அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி" - சிந்தனை...
மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய்
மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்தைகளுடன் யாரும் இல்லை என்பது பஸ் நடத்துனருக்குத் தெரிய வந்தது.
உடனே அவர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு குழந்தைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அக்குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்களால் எதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை.
அவர்களின் சட்டை பையைச் சோதித்து பார்த்தபோது அதில் ஒரு பேப்பர் இருந்தது. அந்தப் பேப்பரில், இந்தக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை என்று எழுதி அதில் ஒரு போன் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தப் போன் நம்பருக்கு போன் செய்து அந்த நம்பருக்குச் சொந்தக்காரரை போலீஸார் வரவழைத்தனர். அவர் வந்தபோது அவரிடம் விசாரித்ததில் அக்குழந்தைகள் அவரின் மகள் குழந்தைகள் என்று தெரிய வந்தது.

அக்குழந்தைகளை பஸ்சில் இருக்கும்படி சொல்லிவிட்டு தனது காதலனுடன் அக்குழந்தைகளின் தாய் போனது விசாரணையில் தெரிய வந்தது. அவர் போவதற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று அங்கு வீட்டில் இருந்த பணத்தைத் திருடிக்கொண்டு தனது தந்தையின் ஸ்கூட்டரையும் திருடிச்சென்றுவிட்டார்.
அப்பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. அதுவும் அந்த நபர் குழந்தைகளைப்பற்றி கவலைப்படாமல் திருடிச்சென்ற தனது ஸ்கூட்டர் பற்றி அதிக கவலைப்பட்டார். அதோடு அக்குழந்தைகளைத் தன்னுடன் அழைத்து செல்லவும் ஆர்வம் காட்டவில்லை.
போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் அரசு சிறார் விடுதியில் போலீஸார் சேர்த்தனர். அதோடு அப்பெண் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
















