மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காத...
தமிழக அமைச்சரவை: "திமுக போல தவெக-வும் புறக்கணிக்கிறது" - கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் ஆதங்கம்
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதுபோல், தவெக ஆட்சிலும் தங்கள் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய 2 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது.
தலைநகரத் தொகுதியான கிருஷ்ணகிரியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ அசோக்குமாரையும், காங்கிரஸ் மூத்த தலைவர் செல்லக்குமாரையும் வீழ்த்தி 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தவெக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் முகுந்தன்.
அதுபோல ஊத்தங்கரை தனித்தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ தமிழ்ச்செல்வத்தையும், காங்கிரஸ் குப்புசாமியையும் எதிர்த்து வென்றார் தவெக-வின் இளையராஜா.

யாருமே எதிர்பார்க்காத வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 தொகுதிகளை தவெக வென்றெடுத்ததால், அமைகின்ற தவெக அரசில் நம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அம்மாவட்ட பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ந்தார்கள்.
காரணம், 2011, 2016ல் வெற்றி பெற்ற அதிமுக ஆட்சியில் கே.பி.முனுசாமியும், பாலகிருஷ்ண ரெட்டியும் அமைச்சர்களாக இருந்து மாவட்டத்துக்கான திட்டஙகளைப் பெற்று தந்தார்கள்.

ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக வெளி மாவட்ட அமைச்சரான சக்கரபாணியைப் பொறுப்பு அமைச்சராக நியமித்தார்கள். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. இது மக்களுக்குப் பெரும் மனக்குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில்தான் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் யாரவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தவெகவினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் விரிவாக்கப்பட்ட அமைச்சர்வையில் வாய்ப்பு வழஙகப்படாதது கிருஷ்ணகிரி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோலவே அதிமுக ஆட்சியில் கே.பி.அன்பழகன், பி.பழனியப்பன் என இரண்டு அமைச்சர்கள் இருந்த தருமபுரி மாவட்டத்தில் 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்த திமுக-விற்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்காததால், அமைச்சரவையில் தருமபுரி மாவட்டத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைப் பொறுப்பு அமைச்சராக நியமித்தார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது பென்னாகரம் தொகுதியில் செல்வாக்குள்ள காங்கிரஸ் தமிழ்குமரன், பாமக பாடி செல்வத்தை எதிர்த்து தவெக கஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை தங்கள் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இப்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
திமுக போலவே, தவெக-வும் தங்கள் மாவட்டஙகளைப் புறக்கணிப்பதாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.
















