கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர...
`மாணவர்கள்மீது கழிவுநீர் பீய்ச்சியடிப்பு' - பினராயி கண்டனம்; சுடிதார் நிறம் மாறியதாக CPM புகார்
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வித்திட்டத்தில் நிபந்தனைகளுடன் இணைவதாக கேரள மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான சி.பி.எம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளம் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.எஸ்.எஃப், ஏ.ஐ.ஒய்.எஃப் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் கூட்டாக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பேரணியாக சட்டசபையை நோக்கிச் சென்ற மாணவர்களை சந்திரசேகர் நாயர் ஸ்டேடியம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸார் அமைத்த பேரிகார்டை மாணவர் அமைப்பினர் தாண்டிச் செல்ல முயன்றனர். அப்போது போலீஸார் Water Cannon Vehicle மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து, போராட்டக்காரர்களைக் கலைத்தனர். போராடிய மாணவர்கள் மீது பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீர் சேறுடன் கலங்களாகவும் அழுக்காகவும் இருந்ததாக எதிர்க்கட்சியான சி.பி.எம் குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், சபாநாயகர் அனுமதியுடன் ஒரு பாட்டிலில் சேற்று நீரை சட்டசபைக்கு கொண்டு வந்திருந்தார். அழுக்கான அந்த தண்ணீரை சட்டசபையில் காண்பித்து பினராயி விஜயன் பேசுகையில், "மாணவர்கள் கூட்டமைப்பினர் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராடிய மாணவர்களை போலீஸார் தண்ணீர் பீய்ச்சியடித்து எதிர்கொண்டனர். சாதாரணமாக போராட்டங்களில் தண்ணீர் பீய்ச்சியடிப்பது வாடிக்கைதான். ஆனால், மாணவர்கள்மீது பிரயோகிக்க அழுக்கான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அமீபிக் மூளைக்காய்ச்சலை பரப்பக்கூடிய அபாயமுள்ள அசுத்தமான தண்ணீர் ஆகும். இந்த தண்ணீரை எதற்காகப் பயன்படுத்தினீர்கள், சாதாரண தண்ணீரை பயன்படுத்தியிருக்கலாமே. இது போன்ற தண்ணீரைப் பயன்படுத்தியதுதான் பிரச்னை. இதற்கு உள்த்துறை அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த உள்த்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, "இது பழைய காலத்து அழுக்கா என்று தெரியவில்லை. தண்ணீரின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக, அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்ப ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாட்டர் அத்தாரிட்டியிடம் இருந்து பெறப்படும் தண்ணீரே வாகனத்தில் நிரப்பப்படுகிறது" என்றார்.

ஆய்வு முடிவுகள் வந்த பிறகு இது குறித்து விவாதிக்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார். அந்த போராட்டத்தை தொடங்கி வைத்த சி.பி.ஐ கட்சி எம்.எல்.ஏ கே.ராஜன் பேசுகையில், "இரண்டு முறை தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட பிறகுதான் நான் அங்கு சென்றிருந்தேன். நான் சென்ற பிறகு மூன்றாவது முறையாக தண்ணீர் பீய்ச்சியடித்தார்கள். அசுத்தமான தண்ணீரால் மாணவிகளின் சுடிதார் நிறம்கூட மாறிவிட்டது" என்றார்.














