`தவெக-வில் இணைய காரணம் இதுதான்..!' - அதிமுக-விலிருந்து விலகிய இசக்கி சுப்பையா
மும்பை: குடியிருப்பு கட்டட வளாகங்களில் பக்ரீத்திற்கு ஆடுகள் பலியிட தடையா?
மும்பையில் பக்ரீத் பண்டிகையையொட்டி குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடுவது வழக்கம். இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்துபவர்கள் மீது மொக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்படி போலீஸாரிடம் பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக முஸ்லிம் சமூகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மும்பையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மதம் சார்ந்த விலங்குகளை பலியிடுவதற்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியது.
குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் குடியிருப்பு கட்டடங்களில் ஆடுகள் பலியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க இக்கோரிக்கையை விடுத்து இருப்பது, முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கிரித் சோமையா, மேயர் ரிது தாவ்டே, நிலைக்குழுத் தலைவர் பிரபாகர் ஷிண்டே, மாநகராட்சியின் பா.ஜ.க தலைவர் கணேஷ் கான்கர் மற்றும் மாநகராட்சி தோட்டக் குழுத் தலைவர் ஹெடல் கலா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து மேயர் ரிது தாவ்டே மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர் அஷ்வினியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். ஆடுகளை பலியிடுவதை தடுப்பது குடிமக்களின் பண்டிகைகளைக் கொண்டாடும் உரிமையை பறிப்பதாகும் என்று அகில இந்திய ஜமியத்துல் குரேஷின் தேசிய துணைத் தலைவர் இம்ரான் பாபு குரேஷி கூறினார்.
மும்பை காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆசிப் ஃபரூக்கி இது குறித்து கூறுகையில், ''இது போன்ற ஒரு தடையை அமல்படுத்தினால், அது சமூக விரோத சக்திகளை சிக்கலைத் தூண்ட வழிவகுக்கும். ஒவ்வொரு தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் விலங்கு பலியிடப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் ஆள்பலம் இல்லை. சமூக வளாகத்தில் ஆடு வெட்டுவதை எந்தச் சங்க உறுப்பினரும் எதிர்க்காவிட்டால், அது வெளியாட்களை எப்படி தொந்தரவு செய்யும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மும்பை புறநகர் பகுதியான மீரா ரோடு பகுதியில் பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கிக்கொண்டு வந்து தங்களது குடியிருப்பு வளாகத்தில் தற்காலிக குடில் ஒன்றை அமைத்து அதில் அடைத்திருந்தனர். மொத்தம் 25 ஆடுகள் அதில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்காலிக குடில் அமைக்க குடியிருப்பு கட்டட கமிட்டியில் ஒப்புதல் பெறப்படவில்லை என்று கூறி, சில குடியிருப்புவாசிகள் ஆடுகளை குடியிருப்பு வளாகத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சில பா.ஜ.க நிர்வாகிகளும், சில குடியிருப்பாளர்களும் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸாரும், மாநகராட்சியினரும் வந்து தற்காலிக குடிலை இடித்தனர். ஆனாலும் ஆடுகள் தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இரவில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.













