ஈரோடு: மேயர் அறையில் முதல்வர் விஜய் படம் வைக்க எதிர்ப்பு; மாநகராட்சியில் சலசலப்ப...
`இந்த ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்!' - திருமாவளவன் திட்டவட்டம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திமுக - விசிக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும், தேவையற்ற வதந்திகளுக்கு விசிக தோழர்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்து, அதைத் தவிர்க்குமாறு நான் முன்னரே அறிவுறுத்தியிருந்தேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தகவல் சரியாகப் போய்ச் சேராததால் சில வி.சி.க தோழர்களும், அதேபோல தி.மு.க-வினரும் அங்கே கூடியுள்ளனர்.

இதனாலேயே இந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. இனிவரும் காலங்களில் நமது இயக்கத் தோழர்கள் இதுபோன்ற மோதல்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைபவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கவுமே இடதுசாரிகளுடன் இணைந்து வி.சி.க இந்த ஆட்சிக்கு ஆதரவளித்தது.
ஆரம்பத்தில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவே முடிவெடுத்திருந்தோம். ஆனால், காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே கூட்டணி என்று அறிவித்ததாலும், இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாலும், ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற ஐயம் ஆளும்கட்சித் தலைமைக்கு இருந்தது. மெஜாரிட்டி குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.
எங்களைப் போன்ற தோழமைச் சக்திகள் இருக்கும் வரை இந்த ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு த.வெ.க தலைமை திறம்பட ஆட்சி நடத்த வேண்டும்.
இந்த ஐயத்தின் காரணமாகவே வி.சி.க மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு அவர்கள் அழைத்தனர். அந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கும் முடிவை எடுத்தோம்.
மெஜாரிட்டியைத் தக்கவைக்க, அ.தி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களைத் த.வெ.க-வில் இணைத்துக் கொள்வது, ஆளும்கட்சியின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கும். எதிர்கால அரசியலுக்கு இது நல்ல அறிகுறி அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளை த.வெ.க தலைமை ஊக்கப்படுத்தக் கூடாது.
தமிழ்நாடு வரலாற்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்றாலும், கர்நாடகாவில் ஏற்கனவே 6 முதல் 7 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சிலருக்கு அமைச்சர் பதவி வழங்குவது மட்டுமே அந்த சமூகத்திற்கான ஒட்டுமொத்த அரசியல் முன்னேற்றமாகி விடாது. எனினும், அந்த சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே" என்றார்.













