நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா ச...
மேகதாது அணை: `கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, ஓரணியில் நிற்க வேண்டிய தருணம்!' - முதல்வர் விஜய்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நீண்ட நாள்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு உரையாற்றிய தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், ``அரசியலும் அரசியல் கட்சிகளும் மக்களுக்காகவே இயங்குபவை. கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் பிரச்சனை என்று வரும்போது அனைத்துக் கட்சிகளும் மக்கள் பக்கமே நிற்க வேண்டும். மனசாட்சியுள்ள ஒரு மக்களாட்சியாக, நமது விவசாயிகளுக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் துணை நிற்பது நமது கடமை, உரிமை, அதற்கும் மேலாக நமது உயிரான உணர்வு ஆகும்.
மனித வாழ்வின் மிக முக்கியமான, அடிப்படையான வாழ்வாதாரங்களில் ஒன்று நீராதாரம் ஆகும். நமது நதிநீர் உரிமையும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது. அதை எப்பாடு பட்டாவது பாதுகாத்தே தீர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உணர்வின் அடிப்படையில், கட்சி வேறுபாடுகளை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இதுவாகும். எனவே, நமது விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டு வரப்படும் இத்தீர்மானத்திற்கு அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு ஆதரவளிக்க வேண்டும்.

தீர்மானம்:
காவிரி நடுவர் மன்றம் 2007-லும், உச்ச நீதிமன்றம் 2018-லும் அளித்த இறுதித் தீர்ப்புகளை மதிக்காமலும், சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் அனுமதியின்றியும் கர்நாடக அரசு மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்ட முயற்சிப்பதை இப்பேரவை வன்மையாக எதிர்க்கிறது.
காவிரிப் படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகை என நீதிமன்றங்கள் குறிப்பிட்டு, அதன் ஒட்டுமொத்த நீரையும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட்டன. எனவே, அங்கு புதிய திட்டங்களைச் செயல்படுத்த இயலாது. இதனால், மேகதாது அணை திட்டத்திற்குத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது.
பிற மாநிலங்களின் இசைவின்றி கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையின் வேறு எந்த இடத்திலோ புதிய அணை அல்லது நீர்த்தேக்கங்களை உருவாக்கக் கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறும், கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முழுமையாக முறியடித்து, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான, ஒருமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழு மனதோடு ஆதரித்து நிறைவேற்றித் தர வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.












