`NEET வினாத்தாள் பிற சோசியல் மீடியாவிலும் கசியும் தான்; ஆனால், டெலிகிராம் Danger...
டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' - மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை தற்காலிகத் தடை விதித்தது.
மேலும், ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை ஜூன் 30 வரை முடக்கவும் உத்தரவிட்டது. இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி தேஜாஸ் காரியா , இன்று காலையில் தனது தீர்ப்பை வாசித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
"தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-ன் படி, அவசரக் காலங்களில் ஒரு தளத்தை முடக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை விகிதாச்சாரக் கோட்பாட்டிற்கு உட்பட்டதே ஆகும். வினாத்தாள் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான தற்காலிகக் கட்டுப்பாடு இது என்பதால், இதை மிகையானது என்று கூற முடியாது. அரசு அனைத்து சட்ட விதிகளையும் பின்பற்றியே இந்தத் தடையை விதித்துள்ளது".
மேலும், ஐடி சட்டத்தின் கீழ் வரும் 'தகவல்' என்ற சொல்லடைவுக்குள் டெலிகிராம் போன்ற செயலிகளும் அடங்கும் என்பதால், இதை விலக்கி வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நேற்று ஜூன் 18 நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, இருதரப்புக்கும் இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
டெலிகிராம் தரப்பு, ``மற்ற சமூக வலைத்தளங்கள் இயங்கும்போது டெலிகிராமை மட்டும் அரசு குறிவைப்பது அரசியலமைப்புச் சட்டம் 14-ன் கீழ் சமத்துவ உரிமையைப் பாதிக்கும் செயலாகும். நீட் தேர்வு போன்ற ஒரு போட்டித் தேர்வு, இந்தியாவின் "இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை" எப்படிப் பாதிக்கும்? மத்திய அரசு யோசிக்காமல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு குறிப்பிட்ட 900-க்கும் மேற்பட்ட சட்டவிரோத நீட் வினாத்தாள் லிங்குகளை ஏஐ மற்றும் மனிதக் கண்காணிப்பு மூலம் 1 மணி நேரத்திற்குள் டெலிகிராம் நீக்கியுள்ளது. நாங்கள் அரசுடன் முழுமையாக ஒத்துழைக்கிறோம்." என்றது
மத்திய அரசு தரப்பு வாதம் :
``டெலிகிராமின் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டது. இதில் சாட்பாட்கள் மூலம் மனிதக் கட்டுப்பாடே இல்லாமல் லட்சக்கணக்கானோருக்குத் தகவல்களைப் பரப்ப முடியும். ஒரு கணக்கை அழித்தால் அதன் தரவுகள் முழுமையாக அழிந்துவிடும் என்பதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது கடினம். இதனால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது. இந்த தளம் அதன் விசித்திரமான கட்டமைப்பால் ஒரு 'பிராங்கென்ஸ்டைன்' கட்டுப்பாட்டை மீறிய அரக்கன் போல உருவெடுத்துள்ளது.
லாப நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தளம், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. நம் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு எங்கு போவது?"வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஒரு பயனர் ஒரு பாட் மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் டெலிகிராமில் ஒரு கணக்கைக் கொண்டு 40 போலி பாட்டுகளை உருவாக்க முடியும் என்பதால், இதில் முறைகேடுகள் மிக வேகமாகப் பரவுகின்றன.
இந்தத் தளம் முழுமையாக 'கிளவுட்' தொழில்நுட்பத்தில் இயங்குவதாலும், கணக்கை நீக்கினால் அனைத்துத் தரவுகளும் அழிந்துவிடும் என்ற அதன் கொள்கையாலும், இதன் மூலம் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து கண்காணிப்பது சாத்தியமற்றது.
கடந்த 2024-ஆம் ஆண்டிலும் இதேபோன்று நீட் தேர்வு முடிந்த பிறகு வினாத்தாளைப் பதிவிட்டு, டெலிகிராமின் 'எடிட்டிங்' வசதியைப் பயன்படுத்தி அது தேர்வுக்கு முந்தைய நாள் பதிவிடப்பட்டது போலத் தேதியை மாற்றியமைத்து வதந்திகள் பரப்பப்பட்டன. மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு வதந்தி பரவினால், கோடிக்கணக்கான மாணவர்கள் தெருவுக்கு வரும் மாபெரும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும்.

"இந்தத் தளம் அதன் பிரத்தியேகக் கட்டமைப்பால் ஒரு கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல உருவெடுத்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகளைத் தடுக்க இணையச் சேவை முழுமையாக முடக்கப்படும் போது, அங்கு 10 சதவீதத்தினர் மட்டுமே வன்முறையாளர்கள், மீதமுள்ள 90 சதவீதத்தினர் பொது மக்கள் தான்.
டெலிகிராமில் ஒரு சேனலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் பயனர்களை, வெறும் சில நொடிகளில் மற்றொரு புதிய சேனலுக்கு முழுமையாக மாற்றிவிட முடியும். இந்தத் தனித்துவமான அம்சம் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்" என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மிகக் கடுமையான வாதத்தை முன்வைத்தார். பயங்கரவாதச் செயல்பாடுகள் மற்றும் பிற சட்டவிரோதக் காரணங்களுக்காக உலக நாடுகள் பலவும் டெலிகிராம் மீது எடுத்துள்ள கடுமையான தடை நடவடிக்கைகளின் பட்டியலையும் மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
டெலிகிராம் தரப்பில் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட சாதாரண பயனர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் வாதிடப்பட்ட போதிலும், நீட் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் என நீதிமன்றம் கருதியுள்ளது. இதன் காரணமாக, ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கப்பட்டிருப்பது சட்டப்படி செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.




















