"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச...
மேற்கு வங்கம்: "இந்துக்கள் வாக்களித்தனர்" - பாஜக; "SIR என்ற பெயரில் வாக்கு கொள்ளை" - மம்தா
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பா.ஜ.க பெற்றுள்ளது. இதன் மூலம் 15 ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பா.ஜ.க முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், ''மக்கள் தவறான ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்துக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் பா.ஜ.கவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பா.ஜ.க நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி காலத்தில் இருந்தே மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பது பா.ஜ.கவின் கனவாக இருந்தது. ஆனால் அது முடியாமல் இருந்தது.
ஆனால் இப்போது அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. நாட்டின் கலாசார தலைநகரமாக மேற்கு வங்கம் இருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள்தான் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் ஆகும். பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கடுமையாக உழைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள், "நீங்கள் அடுத்த முதல்வரா?" என்று கேட்டதற்கு அதனை நிராகரித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேர்தலைச் சந்தித்தோம். பா.ஜ.கவின் கூட்டுத்தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
பெண்களின் வாக்களிப்பு முறைகள் குறித்த கேள்விக்கு, அந்த வகையில் ஆண் மற்றும் பெண் என்ற அடிப்படையில் வாக்குகள் பிரிக்கப்படவில்லை என்றும், இந்து பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.
2026ம் ஆண்டு பா.ஜ.க நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் ஆண்டாகும். அந்த முக்கியமான ஆண்டில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் நீண்ட காலமாகத் திட்டமிட்டு இந்த வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது.
"இதை எதிர்பார்த்தோம்" - மம்தா
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாஜக முதலில் தங்கள் முடிவுகளை ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகக் காண்பிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கணித்திருந்தேன். ஆனால் நானும், எனது கட்சியினரும் புலிக்குட்டிகளைப் போல போராடுவோம்.
தேர்தலுலுக்கு முன்பு 89 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். இது கடந்த 2021ம் ஆண்டு வெற்றிக்குக் காரணமாக இருந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்திற்குச் சற்று அதிகமாகும். எனவே அனைத்து வாக்கு எண்ணும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது பாஜகவின் திட்டம். நேற்றிலிருந்து, முதல் இரண்டு அல்லது மூன்று சுற்றுகளில் எங்கள் முடிவுகளை முதலில் காண்பிப்பார்கள் என்று நான் கூறி வருகிறேன். சுமார் 100 இடங்களில் இரண்டு அல்லது மூன்று சுற்றுகளுக்குப் பிறகு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கல்யாணியில் பொருத்தம் இல்லாத இடத்தில் ஏழு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றி பெற எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் வாக்குகளை எப்படி கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் இன்னும் 70-100 இடங்கள் உள்ளன. அதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
அவர்கள் முற்றிலும் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள். மத்தியப் படைகளுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தனது விருப்பப்படி விளையாடுகிறது” என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.














