`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை ...
`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி
காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் பட்டுக்கோட்டை ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் துறையூருக்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி, கவலை படாதே மகேந்திரன் என தொகுதி கிடைக்காததற்காக வாஞ்சையுடன் மகேந்திரனுக்கு ஆறுதலாக பேசியது பேசு பொருளானது. இந்தசூழலில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு தந்தது. இதனால் பல வருடங்களாக தொடர்ந்த திமுக, காங்கிரஸ் இடையோன கூட்டனி முடிவுக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கிடையே 118 ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதம் கொடுத்தால் மட்டுமே முதல்வராக பொறுப்பேற்கலாம் என ஆளுநர் தரப்பில் சொல்லபட்டதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து விஜய்க்கு தொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியும் ரத்தானது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருவதால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் தெறிக்கின்றன.
இந்த சூழலில் பட்டுக்கோட்டை மகேந்திரனின் பதிவு அரசியல் மற்றும் காவல்துறை வட்டத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஒரு விசில் போதும், கை கோர்க்க கோடி பேர் வருவார்கள். மெரீனா பீச் மணலில் மீண்டும் மக்கள் குரல் ஒலிக்கும். விசில் புரட்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. அது போன்ற ஒரு போராட்டம் விஜய்க்கு ஆதரவாக நடக்கும் என்கிற ரீதியில் மகேந்திரன் பதிவு இருப்பதாக சொல்கிறார்கள்.
காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மூலம் இந்த பதிவை நீக்க சொன்னதாகவும், சத்தியமூர்த்தி பவனில் இருந்து நிர்வாகி ஒருவர் மகேந்திரனிடம் இதை சொல்ல அவர் நீக்க மறுத்து விட்டதாகவும் பேசப்படுகிறது.
இது குறித்து மகேந்திரனிடம் பேசினோம், ``ஆளுநர் செயல்பாட்டின் பின்னணியில் பாஜக-வின் அழுத்தம் இருக்கிறது. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ரோட்டுக்கு வந்து சட்டத்தை நிலைநாட்ட கூடிய சூழல் உண்டாகும்" என்றார்.













