ஈரோடு: மேயர் அறையில் முதல்வர் விஜய் படம் வைக்க எதிர்ப்பு; மாநகராட்சியில் சலசலப்ப...
வேலூர்: `தவெக மா., செ-வின் அட்ராசிட்டி... அத்துமீறல்' - குற்றச்சாட்டும் விளக்கமும்!
த.வெ.க வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆர்.வேல்முருகன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், `ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர்’ போர்வைக்குள் மறைந்துகொண்டு, அதிகாரிகளை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இது பற்றி நம்மிடம் பேசியவர்கள், ``மக்கள் பிரதிநிதியாக இல்லாத வேல்முருகன், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில், தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி புகுந்து அலப்பறைக் கொடுத்திருக்கிறார். மருத்துவர்களை அழைத்து விசாரித்து அறிவுறுத்துவது, நோயாளிகளைப் பார்வையிடுவது, கோப்புகளை ஆய்வு செய்வது என அரசுப் பணிகளுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார். தனது பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு, மருத்துவமனைக்குள் பில்டப்பாக நடக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருக்கிறார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், மாவட்ட அளவிலான அரசுத்துறை அதிகாரிகளையும் போனில் தொடர்புகொண்டுபேசிய வேல்முருகன், `நம் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் சொல்றதையெல்லாம் நீங்க அப்படியே தலையாட்டிக்கிட்டு செய்யக்கூடாது. மாவட்டச் செயலாளருக்குத்தான் அமைச்சருக்கு நிகரான அதிகாரம் இருக்கு. எதுவாக இருந்தாலும் என்கிட்ட கேட்டுட்டுத்தான் நீங்க செய்யணும்’ என்று மிரட்டல் போக்குடன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. குடியாத்தம் தனித்தொகுதியில் த.வெ.க வென்றிருக்கிறது. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ சிந்து தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகனுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.
அங்குசென்ற வேல்முருகன், அவரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து குத்து விளக்கையும் ஏற்றி வைத்திருக்கிறார். எம்.எல்.ஏ-வுக்குத்தான் `அரசு சொத்தை அரசியல் ஆக்கக்கூடாது’ என்று தெரியவில்லை. மாவட்டச் செயலாளருக்குமா அதுபற்றி தெரியாது?. இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி, கூட்டுறவுத்துறை அமைச்சரான அரக்கோணம் காந்திராஜ் வேலூருக்கு வந்திருந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு இடையே குறுக்கு மறுக்கச் சென்று இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தார் வேல்முருகன். வேல்முருகனால், த.வெ.க நிர்வாகிகள் பலரும் கும்பலாக புகுந்ததால் மாவட்ட ஆட்சியர் கடும் கோபமடைந்தார். த.வெ.க மாவட்டச் செயலாளர் வேல்முருகனின் இப்படியான முதிர்ச்சியற்ற போக்கினால், பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. த.வெ.க தலைமை அவரைத் தட்டிவைக்க வேண்டும்’’ என்கின்றனர் கொதிப்போடு.
இது பற்றி, த.வெ.க மாவட்டச் செயலாளர் வேல்முருகனிடம் விளக்கம் கேட்டபோது, ``என்னைப் பார்த்தால் அதிகாரிகளை மிரட்டுற மாதிரியாங்க இருக்கு. `மக்களுக்கு ஃபேவரா பண்ணி கொடுங்க’னுதான் சொல்றேன். யாரோ தவறான தகவல் கொடுத்திருக்காங்க’’ என்றார்.













