குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேட...
"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு
நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.
குறிப்பாக சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், "இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அவைக்காவலர்கள் சபைக்குள் வரவழைக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "நேற்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில் முதல்வர் எதிர்க்கட்சியினரின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான செய்திகளை ஒரு மணி நேர சினிமா பாணியில் பேசி முடித்தார்.
அவர் பேசியதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டோம். அதற்கு சபாநாயகர் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். பழைய வழக்குகளை எல்லாம் திரும்ப சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்.
மிசாவைப் பற்றி பேசுகிறார். அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என இன்று சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். சபாநாயகர் மறுத்துவிட்ட காரணத்தினால் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ வேலு, " எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் பற்றி பேரவையில் பேசக் கூடாது என விதிகள் உள்ளன.
அமலாக்கத்துறையின் அறிக்கையை படித்த முதல்வர், மிசாவைப் பற்றி பேசும்போது ஒரு பாடி லாங்வேஜ் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ் செய்து காட்டினார். அது தவறு. அதேபோல சர்க்காரியா கமிஷன் மூலம் எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்காதப்போது அதைப் பற்றி பேசியது தவறு.
எனவே இதையெல்லாம் சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சபாநாயகர் நீக்க மறுத்துவிட்டார். நடுநிலையாக செயல்பட்ட சபாநாயகர் இரண்டு நாட்களாக சர்வாதிகாரிபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.













