Gold: 'ஏறலாமா, வேண்டாமா?' - அமெரிக்காவின் 'இந்த' அறிவிப்பிற்காக Wait செய்யும் தங...
வெள்ளத்தால் வரமுடியாத இடத்திற்கு சென்ற பெற்றோர் - எதிர்நோக்கி காத்திருக்கும் 12 வயது நேபாள சிறுவன்
நேபாளத்தை புரட்டிப்போட்ட பனிச்சரிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் இறந்துவிட்டனர். மேலும் பல ஆயிரம் பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடியோடு அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இந்த வெள்ளத்தில் 12 வயது சிறுவன் செரிங் என்பவரின் பெற்றோர் அடித்துச்செல்லப்பட்டுவிட்டனர். அவன் மட்டும் எப்படியோ உயிர் தப்பித்துக்கொண்டான்.
ஆகஸ்ட் 26ம் தேதி அன்று திபெத் மற்றும் நேபாள் எல்லையில் உள்ள ரசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அங்கிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்களில் ஒருவராக காத்மாண்டுவில் தனது பாட்டி மிங்மர் டோல்மாவுடன் அந்த சிறுவன் வசித்து வருகிறான்.
சிறுவன் செரிங்கின் தாய் கம்மி. இவரது தந்தை ஃபர்சாங். இருவரும் வெள்ளத்தில் இறந்துவிட்டனர். இது குறித்து இன்னும் செரிங்கிடம் சொல்லப்படவில்லை.

மாறாக, அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள், அவனுடைய பெற்றோர் காட்டில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். வெள்ளத்தில் சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் திரும்பி வருவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகலாம் என்று அவர்கள் கூறி அவனை நம்ப வைத்திருக்கின்றனர்.
பெற்றோருக்காக காத்திருக்கும் சிறுவன்
ஆனால் சிறுவனின் பெற்றோர் இறந்ததை கேட்டு உறவினர்கள் சில நேரங்களில் அழுவதுண்டு. அவர்களிடம் ஏன் அழுகிறார்கள் என்று சிறுவன் கேட்கிறான். சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து அவனும் அழுகிறான். அவன் தனது பெற்றோரைப் பற்றி கேட்டபோது, அவர்கள் காட்டுக்குள் சென்று இருக்கிறார்கள் என்றும், அவர்களை அடைய வழி இல்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். செரிங்கின் சகோதரி மிங்மருக்கு உண்மை தெரியும். அவரது பெற்றோர் இந்த உலகில் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் செரிங் அப்படி சொல்வதில்லை. இப்போதைக்கு, அவர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று நம்பி அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.
ரசுவாவில் தங்களது வீடுகளை இழந்த சுமார் 520 பேர் இப்போது காட்மாண்டுவில் உள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்கள் மற்றவர்களுடன் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதியவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து தாங்கள் இழந்தவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு ஒரு சமுதாய சமையலறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. தங்கும் அறைக்கும் உணவருந்தும் பகுதிக்கும் இடையே, தானியங்கள், காய்கறிகள், பொருட்கள் பெட்டிகள் மற்றும் பாட்டில் தண்ணீர் ஆகியவை விநியோகிக்க தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
40 வயதான ஷியாம் பகதூர் தமாங், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுமார் 35 ஆண்டுகளாக தனது குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.
வெள்ளத்தில் சகோதரர் உட்பட உறவினர்கள், வீடுகளை இழந்து தற்போது காட்மாண்டு மடத்தில் வசிக்கும் ஷியாம் கூறுகையில்,''ஆகஸ்ட் 26 அன்று எனது கிராமத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீர் வெள்ளம் வருவதாகவும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் எனக்கு தகவல் வந்தது. மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கிராமத்தை நோக்கி ஓடினேன். ஆனால் அதற்குள் அனைத்தும் அழிந்துவிட்டன என்கிறார்.

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய மடத்தில் தன்னார்வலராக இருக்கும் புஜுங் வெள்ளத்தில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளார். இவர் தனது குடும்பத்தில் 50 பேரை இழந்துள்ளார். அவரது கிராமத்தில் சுமார் 43 வீடுகள் இருந்தன, ஆனால் குடும்பங்கள் தந்தைகள், சகோதரர்கள், மாமாக்கள், அத்தைகள், உறவினர்கள் மற்றும் மாமியார் என அனைவரையும் வெள்ளத்தில் இழந்துவிட்டார். வெள்ளம் வந்தபோது புஜுங் வெளியில் இருந்தார். கிராமத்தில் மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் இல்லாததால், அவரால் கிராமத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தனது உறவினர்கள் தொடர்பான செய்திக்காக மணிக்கணக்கில் காத்திருந்தார். ஆனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார் வேதனையுடன்.


















