தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்
ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?
சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெளியேற்றியிருக்கிறார் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர். சபாநாயகரின் திடீர் கோபத்துக்கு காரணம் என்ன?

மானியக் கோரிக்கை மீதான கூட்டத்தின் கடைசி நாளில் அவையை சரியாக மதியம் 1:30 மணிக்கு முடித்துவிட வேண்டும். 1:30 மணிக்கு முன்பாக வாக்கெடுப்புக்கு விடப்படும் மானியக்கோரிக்கை தீர்மானங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
இது சட்டப்பேரவை விதி எண் 185.
இதை நேற்று மாலையே சபாநாயகர் குறிப்பிட்டு பேசியிருந்தார். 'வழக்கமாக ஒரு நாளில் ஒரு கட்சிக்கு 2-3 பேர் பேச வாய்ப்பளிக்கப்படும். ஆனால், நாளை கட்சிக்கு ஒருவருக்குதான் பேச வாய்ப்பளிக்கப்படும். உறுப்பினர்கள் அவையை சரியான நேரத்தில் முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், இன்று காலை அவை தொடங்கியவுடனேயே முதல்வர் பேசியதில் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் விவாதத்தை கிளப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த விவாதம் நீள, முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துவிட்டார்.
உடனே சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் போட அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபடவே கோபப்பட்ட சபாநாயகர் உடனடியாக அவைக்காவலர்களை அழைத்து திமுக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினார்.
'நான் எதிர்க்கட்சிகளுக்குதான் அதிக நேரம் பேச அனுமதித்திருக்கிறேன். இன்று விதியை சுட்டிக்காட்டி அவையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் எனும் போது எல்லாம் தெரிந்த அனுபவமிக்க கட்சியினர் அவையை முடக்குவது போல இப்படி செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' என்றார்.
இன்று மதியம் 1:30 மணிக்கு அவை முடிந்தவுடன் உரிமைக் குழு, பொதுக் கணக்கு குழு போன்ற முக்கியமான குழுக்களின் உறுப்பினர்களை சபாநாயகர் அறிவிப்பார்.













