Share Market: உங்க Portfolio-ல் எத்தனை பங்குகள் இருக்கலாம்? 50 பங்குகளே அதிகமா?
7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு நிலவிய கல்லீரல் பிரச்னை காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றை குழந்தையின் பெற்றோர் அணுகியுள்ளனர். அப்போது, அறுவை சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறைச் சான்று பெற்று வருமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமூக வலைதளம் மூலமாகக் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜசேகரனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் சுபாவைச் சந்தித்து, குழந்தையின் மருத்துவ அவசர நிலையை விளக்கியுள்ளனர். மனுவின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட வட்டாட்சியர் சுபா, எவ்வித காலதாமதமும் இன்றி சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகச் சான்று கிடைக்கப் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கை வந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் அலுவலகத்தில் இல்லாத நிலையிலும், மாற்று ஏற்பாடாக வேறொரு பிரிவு அலுவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக உறவுமுறை சான்றைத் தட்டச்சு செய்ய வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதன் மூலம், மாலை அலுவலக நேரம் முடியும் முன்பாக, அதுவும் விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உரிய சான்றிதழ் வழங்கப்பட்டது. வருவாய்த்துறையில் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களைப் பெறப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வரும் சூழலில், குழந்தையின் மருத்துவ அவசரத்தை உணர்ந்து மனிதநேயத்துடன் துரிதமாகச் செயலாற்றிய எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் இந்தச் சேவையை சமூக அஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.












