அரண்மனையில் திருமண ஏற்பாடு; புனே கோட்டையில் மரணம் - இளம் தொழிலதிபர் வழக்கில் சிக...
ஹபீபி: "'என்னமோன்னு நினைச்சேன்; நல்லா நடிச்சுருக்கீங்கப்பா'ன்னு தனுஷ் சொன்னார்" - கஸ்தூரி ராஜா
மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஹபீபி'.
இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜீன்.22) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, "சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்தோம்.
நான், என் மனைவி, செல்வராகவன், தனுஷ், பேரன், பேத்திகள் என எல்லோரும் சேர்ந்து தனுஷ் வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்தோம். அப்போது ஒரு சம்பவம் நடந்தது.
எனக்கு இரண்டு மகள்கள். அதில் ஒரு பெண் விமலா கீதா. சிங்கம் மாதிரி... அந்தப் பெண்ணைப் பார்த்தால் எங்கள் வீட்டில் உள்ள எல்லோருமே பயப்படுவோம்.
அவர் இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அமைதியாக இருந்தார். பிறகு இறுதிக்காட்சி வரும்போது உடனே எழுந்து வெளியே சென்றுவிட்டார். அரை மணி நேரம் அழுதார்.
'ஏம்மா அழுகுற'ன்னு கேட்டேன். 'ஏன் டாடி இப்படி எல்லாம் நடிக்குறீங்கன்னு கேட்டாங்க'. எனக்கே இது புதுவித அனுபவமாக இருந்தது. இந்தப் பொண்ணு அழுகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுதான் தியேட்டர் ரிசல்ட்டாகவும் இருந்தது.
தனுஷ் வந்து என்னை மேலையும் கீழையும் பார்த்தார். "சூப்பரா பண்ணிருக்கீங்க... நான் கூட என்னமோன்னு நினைச்சேன். நல்லா நடிச்சிருக்கீங்கப்பா... எங்கையாவது ஏமாந்து போயிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கெளவுரவமான படத்தில நடிச்சுருக்கீங்க" என்றார். இந்தப் பெயரை எனக்கு வாங்கிக்கொடுத்த மீரா கதிரவன் சாருக்கு நன்றி" என்று உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.














