`தவெக-வில் இணைய காரணம் இதுதான்..!' - அதிமுக-விலிருந்து விலகிய இசக்கி சுப்பையா
Arun IPS : 'திமுக விசுவாசி டு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்!' - தவெக தொண்டர்கள் அப்செட்?! | Timeline
காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் ஐ.பி.எஸ்-யை லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய். இந்த நியமனம் தவெக கட்சியினர் மத்தியிலேயே சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
காரணம், தேர்தலுக்கு முன்பாக அருண் சென்னை கமிஷனராக இருந்த போது விஜய் உட்பட தவெகவின் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

விஜய்யே தலைமை தேர்தல் அதிகாரியிடம் அருண் ஐ.பி.எஸ்க்கு எதிராக புகாரும் அளித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பாக தவெக சார்பில் அருண் ஐ.பி.எஸ் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தேதிவாரியாக இங்கே...
மார்ச் 28 - சென்னை கமிஷனராக இருந்த அருண் ஐ.பி.எஸ் உட்பட முக்கிய அதிகாரிகளின் பணியிடத்தை மாற்றக் கோரி தவெக தலைவர் விஜய்யே தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
மார்ச் 30 : சென்னை கமிஷனரும் (அருண் ஐ.பி.எஸ்) உளவுத்துறை அதிகாரிகளும் அவர்களின் பணிகளில் அப்படியே நீடிக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். - ஆதவ் அர்ஜூனா (போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது)
மார்ச் 31 : எங்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதியே கிடைப்பதில்லை. இப்போதைய சென்னை கமிஷனரே (அருண் ஐ.பி.எஸ்) மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டவர். இப்போதும் அவர் மு.க.ஸ்டாலினுடன் பேசிதான் முடிவெடுக்கிறார். எங்கள் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி கொடுத்தால் உடனே சென்னை சிட்டி கமிஷனரிடமிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு போன் கால் செல்கிறது. கீழே இருக்கும் காவலர்கள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளிப்போம் - ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கம் பிரசாரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது)

ஏப்ரல் 1 : தவெகவின் பிரசாரத்தை பெண்கள்தான் முன்னெடுக்கிறார்கள். அவர்களை மிரட்ட எங்கள் கூட்டத்தில் புகுந்து அதிகாரிகளின் உதவியோடு ரவுடியிசம் செய்கிறார்கள். சென்னை கமிஷனர் உட்பட முக்கிய நகரங்களின் கமிஷனர்கள் மு.க.ஸ்டாலினின் பேச்சையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ப்ரமோஷன் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றனர். இப்போதைய சென்னை கமிஷனரை (அருண் ஐ.பி.எஸ்) வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். - ஆதவ் அர்ஜூனா (தேர்தல் ஆணையரிடம் அதிகாரிகளை மாற்றக் கோரி புகார் அளித்துவிட்டு தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது)
ஏப்ரல் 5 : சென்னை மாநகர கமிஷனரை (அருண் ஐ.பி.எஸ்) மாற்ற வேண்டும் என கேட்கிறோம். அவரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் - ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்)
ஏப்ரல் 6 - ``சென்னை கமிஷனர் அருண் அவர்கள் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் எந்த அதிகாரியின் பேச்சையும் கேட்காமல் செயல்பட்டு வருகிறார். கொளத்தூரில் அங்கிருந்த காவல் அதிகாரிகள் சென்னை கமிஷனரின் பேச்சை கேட்டுக் கொண்டு தலைவரின் பிரசாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவே இல்லை.

மீண்டும் கரூர் மாதிரி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமென அருண் திட்டமிட்டு செயல்படுகிறார். சட்டத்தையும் நீதியையும் அருண் ஐ.பி.எஸ் பின்பற்றுவதே இல்லை. சென்னை கமிஷனரை அசாமுக்கு மாற்றிவிடுங்கள்." - ஆதவ் அர்ஜூனா (வில்லிவாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது)
முதலில் மார்ச் 28 ஆம் தேதியே பெரம்பூரிலிருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது காவல்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி கொடுக்கவில்லை என தவெக தரப்பில் குற்றஞ்சாட்டியிருந்தனர். கமிஷனர் அருண் தான் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்கவிடாமல் அழுத்தம் கொடுப்பதாகவும் விமர்சித்தனர்.
விஜய்யும் இதே காரணத்தை முன்வைத்து அருணை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரும் அளித்திருந்தார். இதன்பிறகு, மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், திட்டமிட்டப்படி பெரம்பூரில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்தார். கொளத்தூர் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தியவர், வில்லிவாக்கத்துக்கு செல்லாமலேயே தவிர்த்தார்.
இதற்கு காவல்துறையையே குற்றஞ்சாட்டினர். கொளத்தூரில் காவல்துறையினர் முறையாக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கமிஷனர் அருண் கரூர் சம்பவம் போன்ற ஒன்றை கொளத்தூரில் நிகழ்த்த நினைத்தார் என வெளிப்படையாகப் பேசினர். இப்படி தேர்தலுக்கு முன்பாக அளுங்கட்சியின் அபிமானியாக இருந்துகொண்டு தங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரியை முக்கியமான பொறுப்பில் அமர்த்தியதே தவெகவின் நிர்வாகிகளே ரசிக்கவில்லை என கிசு கிசுக்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.













