`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை ...
Book Fair: 20 லட்சம் வாசகர்கள் வருகை; 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை; சென்னை புத்தகக்காட்சியில் சாதனை
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பாபாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 49-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.
இந்த ஆண்டு 'இலவச அனுமதி' என்ற முடிவால், கடந்த ஆண்டைவிட வாசகர்களின் வருகை 50% வரை அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

13 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 15 முதல் 20 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி புத்தகங்களில், சுமார் 40% முதல் 50% வரை (சுமார் 40 முதல் 50 லட்சம் புத்தகங்கள்) விற்பனையாகியுள்ளன.
விற்பனையான புத்தகங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அதிக அளவில் விற்பனையாகின.
இது குறித்து பாபாசி உறுப்பினர் சங்கர் கோமதிநாயகம், ``கடந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வந்திருந்தனர். உண்மையான விற்பனை அளவு இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், வைக்கப்பட்டிருந்த 1 கோடி புத்தகங்களில் 40% விற்பனையானதாக கூறப்படுகிறது.
ஒரு புத்தகத்திற்குச் சராசரியாக ரூ.100 என விலை நிர்ணயித்தாலும்கூட, விற்பனை சுமார் 40 கோடி ரூபாயாக இருக்கும். உண்மையான தொகை இதைவிட அதிகமாக இருக்கலாம்" என்றார்.

புத்தகத் திருவிழா குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், ``டிஜிட்டல் யுகத்திலும் இவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பது ஆரோக்கியமான அறிகுறி. அடுத்த ஆண்டு பபாசியின் பொன் விழா என்பதால், சர்வதேசப் பதிப்பகங்களை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், புத்தகத் திருட்டு மற்றும் போலிப் பிரதிகளைத் தடுக்க, 2027-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை புத்தகக் கண்காட்சி நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று பதிப்பாளர்களுக்கெனப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
















