'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்
CJP: "இது அரசியல் இல்லை... மனிதநேயம்!" - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு வரலட்சுமி ஆதரவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான் பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். எவ்வளவு சொல்லியும் போராட்டக்காரர்கள் கேட்காததால் அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள்.

தவிர போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரையும் கைது செய்திருக்கின்றனர். இளைஞர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வரலட்சுமி சரத்குமாரும் டெல்லியில் போராடும் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "சில நேரங்களில், நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையிலேயே மூழ்கிப்போய், சுற்றியுள்ள விஷயங்களை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, நமக்குத் தேவையில்லை, பிரச்னைகள் தானாகவே சரியாகிவிடும் என நினைத்து விடுகிறோம். ஆனால், சமீபத்தில் நாம் பார்த்த விஷயங்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பரவி வரும் வீடியோக்கள் மிகவும் மனதை உலுக்குவதாகவும், நெஞ்சை பிழிவதாகவும் இருக்கின்றன. நமது சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நம்மைத் தாக்குகிறார்கள் என்றால், நாம் யாரிடம் சென்று நியாயம் கேட்பது?
அவர்கள் கேட்பதெல்லாம், எதிர்கால தலைமுறையினரின் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக ஒரு பேச்சுவார்த்தை மட்டும்தான். வேறு யாரும் ஆதரவாக இல்லாதபோது, தங்களின் உரிமைக்காக தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களின் பக்கம் நான் நிற்கிறேன்.

உயிரிழப்புகளைத் தயவுசெய்து இயல்பான ஒன்றாக மாற்றிவிடாதீர்கள்... இங்கே நடப்பது எதுவுமே சரியில்லை! நம் எல்லோருக்கும் வெவ்வேறான அரசியல் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இது அரசியல் இல்லை... மனிதநேயம்! சில நேரங்களில் அமைதியாக இருப்பது பலன் தராது, இப்போது நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குரல் கொடுக்க நான் தாமதித்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்" என்று டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.













