மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: 2வது இடத்தில் அஜித் பவார் கட்சி; தோல்வியடைந்த வ...
Cycling: தினமும் ஆபிஸுக்கு சைக்கிளில் வரலாம்! - சொந்த அனுபவ பகிரல்!
நகர வாழ்க்கையின் நெரிசலில், காலை வேளையில் அலுவலகம் செல்வது என்பது பலருக்கும் ஒரு போர்க்களத்திற்குச் செல்வது போன்ற உணர்வைத் தரக்கூடும். வாகனங்களின் இரைச்சல், புகை, போக்குவரத்து நெரிசல் என அனைத்தும் சேர்ந்து அந்த நாளைத் தொடங்கும் முன்பே சோர்வடையச் செய்துவிடுகின்றன. ஆனால், இதற்கு ஒரு எளிய, ஆரோக்கியமான, மற்றும் அமைதியான மாற்று வழி இருக்கிறது. அதுதான் சைக்கிள் பயணம்.
கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகத்திற்குத் தொடர்ந்து சைக்கிளில் சென்று வருகிறேன். அதனால் என் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிலவற்றைப் பகிர்கிறேன்.
1. உடற்பயிற்சி: நேரமும் பணமும் மிச்சம்
இன்றைய சூழலில் உடற்பயிற்சி செய்யத் தனியாக நேரம் ஒதுக்குவது பலருக்குச் சிரமமாக உள்ளது. அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் செல்வது (எனக்கு போக வர 12 கி.மீ) ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாக அமைகிறது. தனியாக ஜிம் சந்தா கட்ட வேண்டிய அவசியமில்லை. பயணமே பயிற்சியாக மாறுகிறது. தினமும் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

2. போக்குவரத்து நெரிசலும் மன அமைதியும்
பைக் அல்லது காரில் செல்லும்போது டிராபிக்கில் சிக்கினால் ஏற்படும் மன உளைச்சல் (Traffic Stress) அதிகம். ஆனால், சைக்கிளில் செல்பவர்கள் நெரிசலைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வாகனங்களுக்கு இடையே எளிதாக வழி ஏற்படுத்திச் செல்ல முடியும். சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைவு. அலுவலகத்தை அடையும்போது மனது பதற்றமின்றி, மிகவும் 'ரிலாக்ஸாக' இருப்பதை உணர முடியும். இது அன்றைய வேலைநாளைச் சிறப்பாகத் தொடங்க உதவுகிறது.
3. வியர்வை ஒரு தடையா?
சைக்கிள் ஓட்டினால் அதிகம் வியர்க்கும், அலுவலகத்தில் சங்கடமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அனுபவபூர்வமான உண்மை வேறு. பந்தயத்தில் ஓட்டுவது போல் வேகமாக ஓட்டாமல், நிதானமாக ஓட்டினால் வியர்வை அதிகம் வெளியேறாது. சென்னை போன்ற நகரங்களில், பிரதான சாலைகளைத் தவிர்த்துவிட்டு, மரங்கள் நிறைந்த உட்புறச் சாலைகளைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். இது தூய்மையான காற்றையும், நிழலையும் தருவதோடு, வியர்வையையும் குறைக்கிறது.
4. சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல்
பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் இக்காலத்தில், சைக்கிள் பயணம் பர்ஸிற்கு மிகவும் பாதுகாப்பானது. மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தலாம். பைக் அல்லது காரைப் போல இன்சூரன்ஸ், சர்வீஸ் என அதிக செலவுகள் சைக்கிளுக்கு இல்லை. புகையில்லா வாகனம் என்பதால், காற்று மாசைக் குறைப்பதில் நம் பங்கு மிக முக்கியமானது. அதாவது நம் சுயநலத்திலும் ஒரு பொதுநலம்.
5. எல்லாக் காலநிலையிலும் சாத்தியமே!
வெயில் அல்லது மழைக்காலங்களில் சைக்கிள் ஓட்டுவது கடினம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், சரியான மனநிலையும், சிறிய முன்னேற்பாடுகளும் இருந்தால் இது தடையல்ல. மழைக்காலத்தில் ஒரு ரெயின்கோட் அணிந்து செல்வது போதுமானது. வெயில்காலத்தில் தொப்பி மற்றும் சன் கிளாஸ் அணிந்து, நிழலான பாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக நான் இதைச் செய்து வருகிறேன் என்றால், அது சாத்தியமே!

ஆரம்பத்தில் தினமும் 20 கி.மீ, இப்போது 12 கி.மீ (வீடு மாறியதால்) என என்னுடைய தூரம் மாறினாலும், சைக்கிள் ஓட்டுவது தரும் அந்த உற்சாகம் மட்டும் குறைவதே இல்லை. இது வெறும் பயணம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை. நம் ஆரோக்கியத்தையும் பேணி, சுற்றுச்சூழலையும் காத்து, மன அமைதியையும் தரும் என் சைக்கிள் பயணம் தொடர்கிறது... நீங்களும் இணையலாமே!















