மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: 2வது இடத்தில் அஜித் பவார் கட்சி; தோல்வியடைந்த வ...
Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள்.
இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப், ஸைலிட்டால் (Xylitol) அல்லது செயற்கை இனிப்பூட்டிகள், நிறமிகள், மணமூட்டிகள், ஃபில்லர்ஸ் (fillers) போன்றவைச் சேர்க்கப்படும்.
எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை, அதிகப்படியான நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த சூயிங்கம்களை மெல்வதைத் தவிர்க்க வேண்டும்.
சூயிங்கமில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள்களால் வயிற்றுப்போக்கு (laxative effect) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. தொடர்ந்து அல்லது அதிக நேரம் மெல்வதால் சிலருக்குத் தாடை வலியும் அதன் விளைவாக ஒற்றைத் தலைவலியும் ஏற்படலாம்.
மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வருவது போல் உணர்ந்தால், சூயிங்கம் மெல்வதன் மூலம் சிறிது நேரத்திற்குத் தங்களைப் புத்துணர்ச்சியாகவும் விழிப்பாகவும் வைத்துக்கொள்ளவும் முடியும்.
சூயிங்கம் மெல்வதால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கிறது. இது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், பற்சிதைவைத் தடுக்கவும் உதவுவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூயிங்கம் மெல்லுவது சிலருக்குப் பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவலாம்.

சூயிங்கமை மென்று துப்பிவிட வேண்டும் என்றாலும், தற்செயலாக சிலர் அதை விழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. அப்படி விழுங்கிவிட்டாலும் அது குறித்து பயப்படத் தேவையில்லை. சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது. ஆனாலும், உடலுக்குள் செல்கிற அந்நியப் பொருள்கள், மலம் வழியே வெளியேறுவது போல 40 மணி நேரத்துக்குள் சூயிங்கத்தின் மிச்சமும் வெளியேறிவிடும். எனவே, அது குறித்துக் கவலை வேண்டாம்.
சரியான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது சைலிட்டால் (Xylitol) கலந்த சூயிங்கம்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எப்போதும் அளவோடு பயன்படுத்துங்கள். சூயிங்கம் மெல்வது என்பது சிலருக்கு ஒரு வழக்கமாக மாறக்கூடும். ஆனால், அது அடிக்ஷனாக மாற வாய்ப்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















