அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குற...
Deemed University: ``இது அலட்சியமா அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா?" - அண்ணாமலை கேள்வி
Aதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" அந்தஸ்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, சாதாரண கல்லூரிகள் ஏதேனும் ஒரு அரசுப் பல்கலைக்கழகத்துடன், உதாரணமாக: மெட்ராஸ் பல்கலைக்கழகம் அல்லது எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளையே பின்பற்ற வேண்டும். ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறும் நிறுவனங்கள், ஒரு தனிப் பல்கலைக்கழகத்தைப் போலச் செயல்படலாம்.

அரசுப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கட்டணங்கள் அரசால் முறைப்படுத்தப்படும். ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறும்போது, நிர்வாகக் குழுவே கட்டணத்தை நிர்ணயிப்பதால் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் இந்த அந்தஸ்தைப் பெறும்போது, அவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுகின்றன. இதனால், மாநில அரசு மாணவர்களுக்காக ஒதுக்கும் இடங்கள் (State Quota) குறைந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு (7.5% போன்றவற்றுக்கு) பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மூன்று மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர் சந்திப்பின் போது, ``யு.ஜி.சி விதிகளின்படி, மாநில அரசிடம் NOC கோரி விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனில், அது ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவே ('Deemed to be approved') கருதப்படும் என்ற விதி உள்ளது. குறிப்பிட்ட கல்லூரிகள் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் NOC கோரி விண்ணப்பித்தபோது, அப்போதைய நிர்வாகத்தில் 60 நாட்கள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த கால நிர்வாகத் தாமதங்களால் ஏற்பட்டுள்ள இந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க, அப்போதைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் நிகர்நிலை அந்தஸ்தைப் பெறும்போது, அவை முழுமையாக மாநில அரசின் வரம்பில் இருந்து வெளியேறிவிடும். மாநில உரிமைகளுக்கும் சமூக நீதிக்கும் எதிரான இந்தச் செயல்பாட்டைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. எனவே தொடர்ந்து சட்டப் போராட்டம் மற்றும் மேல்முறையீடு செய்வோம்.மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி-யிடம் பேசி, மாநில அரசின் அனுமதியின்றி கல்லூரிகள் தன்னிச்சையாக நிகர்நிலை அந்தஸ்து பெறுவதைத் தடுக்கும் வகையிலும், '60 நாட்கள் காலக்கெடு' விதியை தளர்த்தக் கோரியும் வலியுறுத்தப்படும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறினாலும் குறிப்பிட்ட சதவீத இடங்களை மாநிலக் கோட்டாவிற்கு வழங்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்தும் வழிகளும் பரிசீலிக்கப்படும். இனிவரும் காலங்களில் எந்தவொரு தனியார் கல்லூரியும் இதுபோன்ற சட்டத் துவாரங்களைப் பயன்படுத்தாதவாறு ஒழுங்குமுறை கட்டமைப்பு பலப்படுத்தப்படும். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தற்போது நிர்வாகக் குழு செயல்பட்டு வரும் நிலையில், NOC கோரி வரும் விண்ணப்பங்கள் மீது 60 நாட்களுக்கு மிக முன்னதாகவே தகுந்த காரணங்களுடன் கூடிய தெளிவான உத்தரவை பிறப்பிக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன." என்றார்.

அமைச்சரின் பதில் தொடர்பாக வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது.

இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















