Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!
Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் ஓபி (OP) சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை இணைத்து ஒரு புதிய வாட்ஸ்அப் சாட்போட் சேவையைத் தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை "நலம்ஏஐ" என்ற பெயரில் தங்கள் மொபைலில் சேமித்து, அதன் மூலம் வீட்டிலிருந்தபடியே புறநோயாளி சீட்டை (OP) ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மருத்துவமனைக்குச் சென்றதும் வரிசையில் நிற்காமல், நேரடியாக மருத்துவரைப் பார்க்க முடியும்.
நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சேலம், நாகப்பட்டினம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய 22 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கும் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும்.
கிராமப்புற மக்கள் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாத ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களின் வாட்ஸ்அப் மூலமாகவோ, அல்லது அருகில் உள்ள ஈ-சேவை மையங்களுக்குச் சென்றோ முன்னதாகவே ஓபி சீட்டை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், இந்த வாட்ஸ்அப் முறை கட்டாயமில்லை. எப்போதும் போல நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றும் மக்கள் OP சீட் பெறலாம்.

இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் OP சீட் மட்டுமின்றி, மருத்துவர் எழுதும் மருந்துச் சீட்டு (Prescription), ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வக முடிவுகள் (Lab Reports) மற்றும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் குறித்த விவரங்களையும் தங்கள் மொபைலிலேயே பெற்றுக் கொள்ளலாம். தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகளின்படி, நோயாளியின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) மற்றும் அவர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே இந்த விவரங்களை எடுக்க முடியும் என்பதால் இதில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இந்த சேவையைப் பெற ஆதார் எண் கட்டாயமல்ல, அது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது (Optional) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நோயாளி தன் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 'ஆபா ஐடி' (ABHA ID) உருவாக்க விரும்பினால் மட்டுமே ஆதார் தேவைப்படும். இந்த ஆபா ஐடி இருந்தால், நோயாளி பிற மாநிலங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது தங்களின் முந்தைய மருத்துவக் குறிப்புகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (MMC) நெஞ்சக நோய் பிரிவில் (Respiratory Medicine) இத்திட்டம் சற்று கூடுதலாக, முன்பதிவு (Appointment) செய்யும் வசதியுடன் முன்னோடி அடிப்படையில் (Pilot Basis) தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைக்கான தேதி மற்றும் நேரத்தை வாட்ஸ்அப்பில் பிக்ஸ் செய்துவிட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தவுடன் ஜியோ-பென்சிங் (Geo-fencing) தொழில்நுட்பம் மூலம் 'E-Visit' ஆப்ஷனைப் பயன்படுத்தி டோக்கனை உருவாக்கிக் கொள்ளலாம். மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மக்களின் சிரமங்களைக் குறைக்க இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















