"மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது" - உயர் ...
அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்: "நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்" - நீதிபதிகள் கருத்து
மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ஆனால், நீண்ட காலமாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அரசியல் கட்சியினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தற்போது காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் யார் யாரை வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற தனது தரப்பு பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. இதனால் பல தகுதியான வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதோடு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ''முறையாக அறிவிப்பானை வெளியிடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தேர்வுக் குழு அமைத்து விண்ணப்பங்கள் பெற்று நியமனங்கள் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். எனவே அரசு வழக்கறிஞர் நியமன பொருத்தவரை அரசு நேர்மையாக நடந்து கொள்ளும் என நீதிமன்றம் நம்புகிறது" எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்


















