"மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது" - உயர் ...
'தவெக MLA-க்களுடன் பிரண்ட்ஷிப்; அமைச்சர்களுடன் விருந்து!' - விஜயபாஸ்கர்களின் இணைப்பு விழா ஹைலைட்ஸ்!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கரும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்திருக்கின்றனர். 10,000 பேருடன் பிரமாண்டமாக விழாவை நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த விழாவின் ஹைலைட்ஸ் என்னென்ன?

வழக்கமாக தவெகவில் யாராவது இணைந்தால் அந்த இணைப்பு விழாவை தவெகவே நடத்தும். பனையூரில் பத்துக்கு பத்து அறையில் இணைப்பு விழாவை நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால், முதல் முறையாக தவெகவில் இணையும் இருவர் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு விழாவை நடத்தி முடித்திருக்கின்றனர்.
இணைப்பு விழா நடந்த மகாபலிபுரம் ஹோட்டலிலேயே இரண்டு விஜயபாஸ்கர்களும் அறை எடுத்து தங்கியிருந்தனர். விழாவை ஒருங்கிணைக்க தங்களுக்கு நெருக்கமான ஒரு தனியார் நிறுவன ஊழியர்களை நியமித்திருந்தனர். அதேமாதிரி, புதுக்கோட்டை மற்றும் கரூரிலிருந்து ஆட்களை இறக்க 200க்கும் அதிகமான பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
வருகிற கூட்டத்துக்குச் சமைத்து போட புதுக்கோட்டையிலிருந்து அவருக்கு நெருக்கமான ஒரு கேட்டரிங் சர்வீசை இறக்கியிருந்தார் சி.விஜயபாஸ்கர். காலையில் 10000 பேருக்கு, மதியம் 10000 பேருக்கு எனத் தடபுடலாக விருந்து ரெடி ஆனது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பையும் சி.விஜயபாஸ்கரே எடுத்திருந்தார். அவர் அழைத்து வந்த அத்தனை நிர்வாகிகளும் மேடையில் இடம் எதிர்பார்த்ததால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. தவெகவின் பூந்தமல்லி, அம்பத்தூர், கே.வி.குப்பம், வேலூர் எம்.எல்.ஏக்களும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் மேடையில் முதல் வரிசையில் அமர்ந்திருக்க, விழா ஏற்பாட்டாளர்கள் எழுப்பி முதல் வரிசையில் ஒரு ஓரமாக அமர வைத்தனர்.
பின்னர் இன்னும் ஒரு வரிசை பின்னுக்குத் தள்ளி உட்கார வைத்தனர். இதில் தவெக எம்.எல்.ஏக்கள் கொஞ்சம் அசௌகரியமடைந்தனர். இதைக் கவனித்த சி.விஜயபாஸ்கர் உடனே கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனை எம்.எல்.ஏக்களின் பெயரையும் வாங்கி மேடையிலேயே வாசித்து 'எங்களைக் கௌரவப்படுத்த நீங்கள் வந்ததற்கு நன்றி!' எனக் கூறி ஒவ்வொருவரிடமும் சென்று கைகுலுக்கி நட்பு பாராட்டி சூழலை இலகுவாக்கினார்.
புதுக்கோட்டையில் ஏற்கனவே அமைச்சர் பர்வேஸ் இருக்கிறார். விராலிமலை, அறந்தாங்கி, புதுக்கோட்டை என மூன்று தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர் வேறு. அதனால் எப்படி ஒரு உறையில் இரு கத்தி இருக்க முடியும்? என்கிற பேச்சு தவெக முகாமில் ஏற்கனவே எழுந்துவிட்டது. இந்த இடத்தில்தான் தான் ஒரு பக்கா அரசியல்வாதி என சி.விஜயபாஸ்கர் நிரூபித்தார்.
மேடைக்குக் கீழே இருந்த பர்வேஸை சி.விஜயபாஸ்ரே கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து சென்றார். மேடையில் பேசும் போதும் வார்த்தைக்கு வார்த்தை 'பர்வேஸ் மாப்பிள்ளை...' எனக் கூறி பர்வேஸை வெட்கப்பட வைத்தார்.

சி.விஜயபாஸ்கர் அளவுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மதியழகனைப் பற்றி பேசவில்லை. மதியழகனும் கொஞ்சம் சுரத்தை இல்லாமல்தான் மேடையில் அமர்ந்திருந்தார்.
அரங்கம் நிறைந்து கூட்டம் ஜகஜோதியாகத் தொடங்கியது. செங்கோட்டையன் பேசி முடித்தவுடன் இரண்டு விஜயபாஸ்கர்களுக்கும் புஸ்ஸி ஆனந்த் கட்சி துண்டை போட்டுவிட்டார். 'அண்ணன் இணைஞ்சுட்டாரு டவராவ ஒப்பன் பண்ணுங்கய்யா...' என மட்டன் பிரியாணி சப்ளை தொடங்க, அரங்கிலிருந்த கூட்டம் மொத்தமும் உணவு இடைவேளைக்குச் சென்றுவிட்டது.
கூட்டம் கொத்தோடு கலைவதைக் கண்டு ஜெர்க் ஆன விஜயபாஸ்கர்கள், பாதுகாவலர்களை அழைத்து கதவை மூட சொல்லியும் வெளியே இருந்து கூட்டத்தை இழுத்து பிடித்து வரவும் உத்தரவிட்டனர். வம்படியாக உள்ளே இழுத்து கேமராவுக்கு கூட்டம் காட்டுமளவுக்கு அரங்கத்தைப் பாதியளவு நிறைத்திருந்தனர்.
இரண்டு விஜயபாஸ்கர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இதைப் பற்றியும் கூட்டத்தில் டச் செய்து சென்றனர். அருண்ராஜ் பேசும் போது, ''நம் கட்சிக்கு வந்த பிறகு தலைவர் எந்தத் தப்பும் செய்யவிடமாட்டார்'' என்பதைப் போல பேசினார். எனில் இதற்கு முன்புள்ள கோட்டையெல்லாம் அழித்துவிடுவார்களோ எனும் கேள்வி எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ''இனிமேல் நீங்கள் எங்கள் கட்சி. உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்'' எனப் பேசி வாஷிங் மெஷிங்னில் சலவைப் பொடியை அள்ளி வீசிச் சென்றார்.

விழா முடிந்த பிறகு எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் சாப்பிட தனி இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே ''ஆனந்த் அண்ணன் வெஜ்ணே... அருண்ராஜ் சாருக்கு என்ன வேணும்னு கேட்டு வைங்கண்ணே...'' என கேட்டரிங்காரர்களோடு சாம்பார் வாளி தூக்காத குறையாக ஏகத்துக்கும் உபசரித்து அமைச்சர்களுடனேயே அமர்ந்து விருந்தையும் விஜயபாஸ்கர்கள்.
கடைசியாக, 'தளபதிட்ட ஒரு டேட் வாங்கி கொடுங்க. ஊர்ல வச்சு விழா எடுத்து ஜமாய்ச்சிடுறோம்' என தவெகவின் முக்கியஸ்தர்களிடம் கூறி சலவையில் வெளுத்த வெள்ளந்தி சிரிப்போடு எல்லாரையும் வழியனுப்பி வைத்தனர் விஜயபாஸ்கர்கள்.












