செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்...
சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள அப்பனேரி பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, சங்கராபுரத்தில் வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. மனைவி திவ்யபாரதியின் நடத்தையில் சந்தேகமடைந்த மணி, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மணிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. மதுபோதையிலும் மனைவியிடம் தகராறு செய்வதும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தும் வந்துள்ளனர். வழக்கம் போல் நேற்று இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி கீழே விழுந்து இறந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இன்று காலை மணியின் மரணம் குறித்துத் தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார், மணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில், சண்டையின் போது தான் தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகத் திவ்யபாரதி போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், திவ்யபாரதியிடம் விசாரணை நடத்தினர்.

சண்டையின் போது மணியைக் கழிவறைக்குள் தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது தலை, தொடை மற்றும் மர்ம உறுப்பில் குத்தியதில், நீண்ட நேரம் ரத்தம் வெளியேறி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் திவ்யபாரதியைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















