வயநாடு: "அந்த உத்தரவு மீறப்பட்டதே நிலச்சரிக்குக் காரணம்'' - கேரள முதல்வர் விளக்க...
'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?
திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், அந்த அறையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையில் ரூ.14,40,000 ரொக்கப் பணம், 153 ஏ.டி.எம் கார்டுகள், 52 உயர்தர ஆண்ட்ராய்டு செல்போன்கள், 21 சிம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், மடிக்கணினி, மோடம், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28), பழனி முருகன் (29), ராஜ்குமார் (22), பிரவீன் (24), முத்தமிழ்செல்வன் (24) மற்றும் அஜ்மீர் அலி (32) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் நஸ்ருதீன், தனது வீட்டைக் காலி செய்து தருமாறு வலியுறுத்தியபோது, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதும் விசாரணையில் அம்பலமானது.
வீட்டு உரிமையாளரை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது, பலரது ஏ.டி.எம் கார்டுகளைத் திருடியது, போலி ஆவணங்கள் தயாரித்துக் கூட்டுச்சதியில் ஈடுபட்டது மற்றும் ஆன்லைன் பண மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 6 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
















