"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவ...
வருங்கால கணவருடன் திருமண ஏற்பாடு; காதலனுடன் ரகசியக் கல்யாணம் - சியா கோயலின் இரட்டை வாழ்க்கை ?
புனேவைச் சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சியா கோயல், தனது வருங்கால கணவரான கேத்தனை கொலை செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது காதலர் சேத்தன் சௌத்ரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்போது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த புதிய திருப்பம், இவ்வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது.
போலீஸ தரப்பு தகவலின்படி, சியா கோயலுக்கும் கேத்தன் அகர்வாலுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சியாவும் அவரது காதலர் சேத்தனும் தங்களது திருமணத்தை ரகசியமாக முடித்துள்ளனர். இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் இந்தத் திருமணத்தை மறைத்து, அதே சமயம் கேத்தனுடனான திருமண ஏற்பாடுகளையும் சியா தொடர்ந்து கவனித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக குற்றவாளிகளின் டிஜிட்டல் தடயங்களை போலீசார் ஆய்வு செய்தபோது இந்த ரகசியத் திருமணம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல்கள், அழைப்பு பதிவுகள், இருப்பிடத் தரவுகள் (location data) மற்றும் இணைய தேடல் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த ரகசியத் திருமணத்தை ஆவணப்பூர்வமாக நிரூபிக்க, தம்பதியரின் திருமணச் சான்றிதழைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் திருமணத்திற்கு சியா கோயலின் கல்லூரி நண்பர்கள் இருவர் சாட்சிக் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சியாவும் சேத்தனும் திருமண மாலைகளுடன் இருந்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள், ஒரு பிரைவேட் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகைப்படங்களை மீட்கும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் திருமணத்தை இரு குடும்பத்தினரிடமிருந்தும் மறைத்த தம்பதியினர், பின்னர் கேத்தனை திட்டமிட்டு தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்னதாக, ஜூன் 18 அன்று லோனாவாலா அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோகாகாட் கோட்டையிலிருந்து கேத்தன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஜூன் 14 அன்று கேத்தனைக் கொலை செய்ய முதல் முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரட்டை வாழ்க்கை மற்றும் ரகசியத் திருமணம் குறித்த கோணத்தில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.!



















