திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய ...
கிலோ கணக்கில் தங்கம்... கோடிக்கணக்கில் சொத்துகள் - DSP கைதில் அதிர்ந்துபோன அதிகாரிகள்; பின்னணி என்ன?
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தெலங்கானா காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சங்கிரெட்டி பீம் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த மே மாதம் பீம் ரெட்டி தனது மனைவியுடன் சார்தாம் யாத்திரை செல்வதற்கு முன்பாக ஒரு டைரி எழுதியுள்ளார். அதில் தனக்குள்ள சொத்துக்கள், முதலீடுகள், கடன்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களைக் கைகளால் பட்டியலிட்டு, அதன் ஸ்கேன் நகல்களை வாட்ஸ்அப் மூலம் தனது மகன்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த ரகசிய டைரியைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், அதன் அடிப்படையில், ஜூலை 2-ம் தேதி தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பீம் ரெட்டியின் வீடு, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டன. ஹைதராபாத், கச்சிபௌலி, தெல்லாபூர் பகுதிகளில் சொகுசு வில்லா, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலி மனைகள், மணிகொண்டாவில் வணிக வளாகப் பங்குகள், விகாரபாத், சங்காரெட்டி மற்றும் கர்நாடகாவில் சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் இருப்பது தெரியவந்தது.
'ராகவேந்திரா ராக் சாண்ட் மினரல்ஸ்' நிறுவனத்தில் ரூ. 75 லட்சம் முதலீடு. மேலும், பீம் ரெட்டி மற்றும் அவரது பினாமி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ. 43.60 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 19.91 லட்சம் வங்கி இருப்பு ஆகியவற்றை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று இரவு இப்ராஹிம்பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, சங்கிரெட்டி பீம் ரெட்டியை அதிரடியாகக் கைது செய்தனர். விரைவில் இவர் ஏ.சி.பி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















