"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணிய...
Gold: "ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீங்க" - மோடியின் ஐடியாவும், அதன் பின்னிருக்கும் உலக அரசியலும் என்ன?
"கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.
அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிருங்கள்" என்று நேற்று இந்தியப் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சு நிச்சயம் இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். காரணம், இந்தியர்களின் வாழ்வோடு ஒன்றியுள்ள மிக முக்கிய உலோகம், 'தங்கம்'.
அந்தத் தங்கத்தை வாங்காதீர்கள்... அதுவும் ஓராண்டிற்கு என்றால், அதிர்ச்சியைக் கேட்கவா வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி
இதில் அதிர்ச்சியைத் தாண்டி நிறைய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஈரான் போர் இப்போதைக்கு முடிவதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தியையும் திறப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றித்தான் அந்தப் போரே போய்க்கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தி வாயிலிலேயே நின்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போர் முடிந்தாலும் அந்தக் கப்பல்கள் வந்து சேர 2-3 நாள்கள் ஆகும்.
இரண்டு, மூன்று நாள்கள் என்று அசால்டாக நினைத்துவிட வேண்டாம். போர் முடிந்து ஹார்முஸ் ஜலசந்தி திறந்ததுமே, அத்தனை கப்பல்களும் எளிதாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துவிட முடியாது.
போக்குவரத்தைச் சரிசெய்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கப்பல்களின் பயணம் சீர்செய்யப்படும்.
பயன்படுத்த முடியாது...
இன்னொரு பக்கம், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், பல மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெயின் உற்பத்தியை வெகுவாகக் குறைந்துள்ளன.
அந்த நாடுகளும் போர் முடிந்ததும் சட்டென உற்பத்தியைத் தொடங்கிவிட முடியாது. தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய வேண்டும். உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டு, அது கப்பலில் ஏற்றப்பட்டு, உலக நாடுகளைச் சென்று சேர்வதற்குள் பல மாதங்கள் ஆகிவிடும்.

மத்தியக் கிழக்கு நாடுகளும் வேண்டாம்... அவர்களின் எண்ணெய்யும் வேண்டாம் என்று முடிவு எடுப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருக்கிறோம். அதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெனிசுலாவின் எண்ணெய் வளம் தற்போது அமெரிக்காவிடம் இருக்கிறது. அந்த எண்ணெய்யை சந்தையில் விற்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிக ஆவலாக இருக்கிறார். மேலும், அமெரிக்காவிடமும் எண்ணெய் வளம் இருக்கிறது.
அங்கே இருந்து எண்ணெய் கொண்டு வருவதாக இருந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது.
இந்திய ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய்யின் விலை இப்போதே 100 டாலருக்கு மேல் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்த எண்ணெய்யை ரூபாய் கொண்டு வாங்க முடியாது. அமெரிக்க டாலர்களை வைத்துத்தான் வாங்க முடியும்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு அமெரிக்க டாலர் 95 ரூபாய் என்பது வரை கூட சென்றுவிட்டது. இந்த நேரத்தில், அமெரிக்க டாலரை வாங்குவது இந்தியப் பொருளாதாரத்திற்குச் சற்று சிரமம்தான்.
அதனால், இப்போது இருக்கும் அந்நிய செலாவணியை மெயின்டெயின் செய்ய வேண்டியது அவசியம்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியில்லாமல், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் எடுத்து வர வேற வழிகளைப் பயன்படுத்தும்போது, இந்தியா வந்து சேர 10 நாள்களுக்கு மேல் ஆகும்.
மேலும், சில வழிகளில் வானிலை சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
10 நாள்களுக்கு மேல் ஆகும் போது, அந்த நாள்களில் செலவுகள், பணியாளர்களின் சம்பளம் போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். அதனால், அந்நிய செலாவணியை இப்போது பார்த்து பார்த்துதான் பயன்படுத்த வேண்டும்.
இங்கே தங்கம் மற்றும் எண்ணெய், அந்நிய செலாவணிக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழுகிறதா?
கச்சா எண்ணெய்யைப் போல, தங்கத்தையும் இந்தியா பெருமளவில் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்ய இங்கேயும் அமெரிக்க டாலர் தேவை.
ஒப்பிட்டளவில் பார்த்தால், இன்றைய சூழலில், தங்கத்தை விட, கச்சா எண்ணெய்க்கானதேவை தான் அதிகம்.
ஆம்... தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டுமே வாங்குகிறோம். ஆனால், கச்சா எண்ணெய் அப்படி இல்லை.

தினப் போக்குவரத்திற்கு பெட்ரோல், டீசல், நமக்கு தேவையான காய்கறி முதல் துணி வரை அனைத்தையும் நம்முடன் கொண்டுவர போக்குவரத்திற்கும் பெட்ரோல், டீசல் தேவை.
இதை டாலர் மூலம்தான் இறக்குமதி செய்ய முடியும். தங்கத்திற்காகச் செல்லும் டாலரை கச்சா எண்ணெய்க்குச் சிறிது காலம் மடை மாற்றலாம் என்பதுதான் மோடி பேச்சின் ஐடியா.
இந்த நேரத்தில் அந்நிய செலாவணி போல, இப்போது பெட்ரோல், டீசலையும் சேமிப்பது அவசியம். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டது.
ஆனால், இந்தியாவில் இன்னும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. அதனால், வொர்க் ஃப்ர்ம் ஹோம் பார்க்கும்போது, அலுவலகத்திற்குச் செல்ல செலவாகும் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். இதுவும் நம் நாட்டிற்கு ஒரு வகையில் உதவும்.
இதனாலும், குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சேமிக்கலாம்.
மேலோட்டமாகப் பார்த்தால், மோடியின் பேச்சு 'இப்படி சொல்றாரே' என்று தோன்றும். ஆனால், பொருளாதார பார்வையில் பார்த்தால், இந்த முன்னெடுப்புகள் இந்த நேரத்திற்கு மிக முக்கியமானது.
வருமுன் காப்போம் மக்களே!













