"இனி யார் என்னை அம்மானு கூப்டுவா?" - போனில் பேசிய படி கார் ஓட்டிய பெண்ணால் பலியா...
Gold: வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறதா? வருமான வரித்துறை என்ன செய்யும்?
நம்மில் ஒவ்வொருவர் வீட்டிலும் ‘எவ்வளவு தங்கம் இருக்கிறது?’ என்கிற அளவு மாறுபடும். ஒருவர் வீட்டில் கிராம் கணக்கில் தங்கம் இருக்கலாம்... இன்னொருவர் வீட்டில் பவுன் கணக்கில் தங்கம் இருக்கும்... மற்றொருவர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருக்கலாம். இந்தத் தங்கத்தின் அளவு அவரவர் வசதிக்கேற்ப மாறுபடும்.
ஆனால், சட்டப்படி, ஒருவர் வீட்டில் ‘இவ்வளவுதான்’ தங்கம் இருக்க வேண்டும் என்கிற அளவு ஏதேனும் இருக்கிறதா என்பதை நாக்பூரில் நடந்த சம்பவம் ஒன்று நமக்குச் சொல்லித் தருகிறது.

2016-ம் ஆண்டு நாக்பூரில் உள்ள பட்டயக் கணக்காளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்திருக்கிறது. அந்தச் சோதனையில் அந்த வீட்டில் 2.434 கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.90.59 லட்சம்.
இதில் ரூ.33.33 லட்சம் மதிப்புள்ள 1.314 கிலோ தங்கத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளது வருமான வரித் துறை.
இதற்குக் காரணம், அவருக்கு இந்தத் தங்கம் எங்கே இருந்து வந்தது... எப்படி வந்தது என்பதற்கான சாட்சி எதுவும் இல்லை.
இதையடுத்து, வருமான வரித் துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகளுக்கு உரிமை மற்றும் வருவாய் ஆதாரம் இல்லை என்றும், அதைக் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்றும் கூறி பட்டயக் கணக்காளரின் வரிக் கணக்கில் சேர்த்தது வருமான வரித் துறை.
வருமான வரித் துறையினரின் இந்தப் பதிவை எதிர்த்து பட்டயக் கணக்காளர் நாக்பூரில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பட்டயக் கணக்காளர் தன்னுடைய வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் குறித்துக் கொடுத்த விளக்கம்:
“பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்று வருமான வரித் துறையினர் கூறும் அனைத்துத் தங்கமும் எனது அல்ல. அதில் சில (55.8 கிராம் தங்கம்) என்னுடைய மனைவியினுடையது. அது அவரது பெற்றோரால் வழங்கப்பட்ட தங்கம் ஆகும்.
பெர்சனலாக நான் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு 121.5 கிராம். இதில் 72.6 கிராம் தங்கத்தை நான் வாங்கியது என்னுடைய வங்கிப் பரிவர்த்தனைக் கணக்கில் தெரியும்.
மீதம் உள்ள 48.9 கிராம் என்னுடைய உறவினர்களால் எனக்கு வழங்கப்பட்டது ஆகும்” என்று அந்த வழக்கில் வாதாடினார்.
பட்டயக் கணக்காளரின் கூற்றைக் கேட்ட தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு:
பட்டயக் கணக்காளர் காட்டிய கணக்கின் படி, அனைத்தும் சரியாக இருக்கிறது. வெறும் ரூ.3.86 லட்சம் மதிப்புள்ள நகைக்குத்தான் கணக்குத் தெரியவில்லை.
ஆனால், சம்பந்தப்பட்டவரின் வயது, திருமணம் போன்றவற்றைக் கருதினால், அவருக்குப் பரிசுகள் கிடைத்துள்ளதற்கான வாய்ப்புகள் உண்டு.
இதனால், இந்த ரூ.3.86 லட்சம் மதிப்பிலான நகைக்கும் எந்தவொரு வழக்கும் தேவையில்லை என்று வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ஏகப்பட்ட எண்கள் வந்துள்ளதால், கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். இதனால், நமக்கு ஏற்றபடி, வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் விதிமுறையின் படி, இந்தியாவில் எந்தவொரு ஆவணமும் இல்லாமல்...
திருமணம் ஆன பெண்கள் 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும், ஆண்கள் 100 கிராம் தங்கத்தையும் வைத்திருக்கலாம்.
இதற்கு மேல் தங்கம் வைத்திருக்கக் கூடாதா என்று கேட்டால், தாராளமாக வைத்திருக்கலாம். இந்தியாவில் ஒருவர் இவ்வளவு தங்கம்தான் வைத்திருக்க வேண்டும் என்கிற எந்த அளவும் இல்லை.
ஆனால், குறிப்பிட்டுள்ள தங்கத்தின் அளவைத் தாண்டும்போது, அந்தத் தங்கம் எங்கிருந்து வந்தது... எப்படி வாங்கப்பட்டது, தங்கத்திற்கான பில் போன்ற ஆவணங்களைச் சரியாக வைத்திருக்க வேண்டும்.
பட்டயக் கணக்காளரின் கேஸ் ஸ்டடியை எடுத்துக்கொண்டால்...
அவர் முதலில் கூறிய, அவருடைய மனைவியின் 55.8 கிராம் தங்கம்.
வருமான வரித் துறையினரின் கணக்கின் படி, பட்டயக் கணக்காளரின் வீட்டில் இருந்து மொத்தமாகத்தான் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
வீடு என்றால், அங்கே பட்டயக் கணக்காளர் மட்டும் இருக்கமாட்டார். அங்கேதான் அவரின் மனைவியும் இருப்பார்.
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் விதிமுறையின் படி, அவரின் மனைவிக்கு 500 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம்.
இதனால், 55.8 கிராம் தங்கம் 500 கிராம் தங்கத்திற்குள்ளேயே அடங்கிவிடும்.
இரண்டாவது, அவர் வாங்கிய 72.6 கிராம் தங்கத்திற்குப் பக்கா கணக்கு உள்ளது. இதனால், எந்தப் பிரச்னையும் இல்லை.
மூன்றாவதாக, பரிசு என்று அவர் கூறுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள பட்டயக் கணக்காளர் நடுத்தர வயது உள்ளவர். அவருக்குத் திருமணமும் ஆகிவிட்டது.
இதனால், இந்தியாவின் கலாசாரப்படி, தங்கத்தைப் பரிசாக வழங்குவது இயல்பு. அவருடைய வயதைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் தங்கத்தைப் பரிசாக அதிகம் பெற்றிருக்கலாம்.
அடுத்ததாக, திருமணத்தின்போது, தங்கம் பரிசாக வழங்கப்படுவதும் இயல்புதான்.
இவற்றை கணக்கில் கொண்டுதான், பட்டயக் கணக்காளரை எந்தவொரு புகாருமின்றி இந்த வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறது தீர்ப்பாயம்.

















