'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்...
Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?
சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறார் சிந்து. குறைந்த வாடகை என்பதாலும், அழைப்பது பெண் என்பதாலும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, சிந்து இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வசதியான வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார் மகி.

எதிர்பார்த்தபடியே, சிந்து மீது மகிக்குக் காதலும் வருகிறது. குடியேறிய சில நாள்களுக்கு ரொமான்ஸ் காற்று விச, அதற்கடுத்து அமானுஷ்யங்களும், மர்மங்களும் மகியை வரிசைக்கட்டி வந்து துரத்துகின்றன. உண்மையில் சிந்து யார், அந்த அமானுஷ்ய வீட்டிலிருந்து மகி தப்பினாரா என்பதை ஹாரர் இல்லாத த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.
அப்பாவித்தனம், ரொமான்ஸ், ஆற்றாமை, பயம் என வழக்கமான 'வழக்கமான ஜி.வி. பிரகாஷாக'வே வந்து, ஓரளவிற்குத் தேவையானதைச் செய்து கரைசேர்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். மர்மத்தையும், காதலையும், அப்பாவித்தனத்தையும் கலந்து கட்டிய முகபாவனையில் படம் முழுவதும் வரும் கயாடு லோஹர், அக்கதாபாத்திரம் கொடுக்க வேண்டிய 'த்ரில்'லைக் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார். முதற்பாதியின் காமெடிக்கு மாறனும், 'ஆதித்யா' கதிரும் கைகொடுக்க, டி.எம். கார்த்தி தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் பதற்றமான காட்சிகளைத் தூக்கிவிடும் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, செயற்கையான சண்டைக்காட்சிகளில் கைவிடுகிறது. நீட்டி முழக்கிப் போய்க்கொண்டே இருக்கும் முதல் பாதியில் கத்திரியைத் தொலைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் எம். ராஜேஷ். சாம் சி.எஸ்ஸின் ஆங்கில வரிகள் கலந்த பின்னணி இசை வெகுசில இடங்களில் மட்டும் பரபரப்பைக் கொளுத்திப் போடுகின்றன. ஏனைய இடங்களில் காட்சிகளிலிருந்து விலகி, வேறு தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி கிராமம் ஒன்றில் நடக்கும் அமானுஷ்யமான பிரசவத்தோடு சுவாரஸ்ய முடிச்சைப் போட்டுத் தொடங்குகிறது படம். நிகழ்காலக் கதையில், மகியின் வாழ்க்கை, பொருளாதார சூழல் என நகரும் திரைக்கதை, சிந்துவின் வருகை, அவருடனான ரொமான்ஸ் என அடுத்தகட்டத்திற்குச் செல்கிறது.

ஆனால், அதற்கடுத்து த்ரில் அத்தியாயத்துக்குள் நகர மாட்டேன் என அடம்பிடித்து அதே இடத்திலேயே இடைவேளை வரை உட்கார்ந்திருப்பது பெரும் அயர்ச்சியையே தருகிறது. மேலும், லாஜிக்கே இல்லாத ரொமான்ஸ் காட்சிகள் சோதனை மேல் சோதனை! ஆங்காங்கே வரும் மாறன் - கதிர் காமெடிகளும், எப்போதாவது வரும் திகில் காட்சிகளும் சிறிதளவு மட்டுமே ஆறுதல் தருகின்றன. மேலும், இடைவேளை ட்விஸ்ட்டும் முன்னமே நாம் கணித்துவிடும் படி இருப்பது மைனஸ்!
அமானுஷ்யப் பிரசவத்தின் பின்னணி, சிந்துவின் பின்னணி, வீட்டிற்குள் இருக்கும் ரகசியங்கள் என அடுக்கடுக்கான கதைகளுடன் தொடங்கும் இரண்டாம் பாதி, சுவாரஸ்யத்தைத் தேடித்தேடிப் பிடித்துக் கொண்டுவருகிறது. சிந்துவின் குணாதிசயங்களும், அதனால் பாதிக்கப்பட்ட டி.எம்.கார்த்திக்கும், அவரோடு கைகோர்க்கும் ஜி.வி. பிரகாஷும் என ஆங்காங்கே காமெடியும், பதற்றமும் சுவாரஸ்யம் தருகின்றன. ஓவியங்களை வைத்து அரங்கேறும் விஷயங்களும் நல்லதொரு கற்பனை! ஆனால், மீண்டும் குழப்பமான பின்கதைகளுக்குள் ஓடும் திரைக்கதை, காட்சிகள் நடைபெறும் இடங்களை மாற்றி மாற்றிக் காட்டி அயர்ச்சியையே உண்டாக்குகிறது.

மேலும் அத்தனை அடுக்குகள் கொண்ட மாடியிலிருந்து நாயகன் தப்பித்து கீழே வருவதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதையும், சிந்துவின் கதாபாத்திரத்துக்கு என்னென்ன சக்திகள் உள்ளன என்பதையும் இன்னுமே தெளிவாக விளக்கியிருக்கலாம். முக்கியமாக, பெரியளவில் திரைக்கதை லேயர்கள், எதிர்பாராத ட்விஸ்ட்கள், சுவாரஸ்யமான காட்சிகள் என எதுவும் இல்லாமல் வறட்சியில் சிக்குகிறது திரைக்கதை. அதனால், பதற்றம் பற்றிக்கொள்ள வேண்டிய இறுதிக்காட்சிகள் தேமேவென ஓடி முடிகின்றன.
ஐடியாவாக மட்டுமே சுவாரஸ்யம் தரும் `இம்மார்ட்டல்', மிகப் பலவீனமான திரைக்கதையால் பார்வையாளர்களை பெரும் சோதனைக்குள்ளாக்குகிறது.
















