'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்...
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டி!
மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டியில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கண்ணைக் கவரும் வகையில் குழந்தைகள் பங்கேற்றனர்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் தமிழ் அரிமா சங்கம் சார்பில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி மாறுவேடப் போட்டி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தமிழ் அரிமா சங்கத்தைச் சேர்ந்த விஜய பிரகாஷ் தங்கதுரை செய்திருந்தனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 3 வயது முதலான குழந்தைகள், தலையில் கிரீடம், கையில் புல்லாங்குழல், பட்டுச் சால்வை உள்ளிட்ட அலங்காரங்களுடன் கிருஷ்ணர் வேடமிட்டு அழகுற காட்சியளித்தனர். பெண் குழந்தைகள் பலரும் ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகள், பெற்றோருடன் கோவில் வளாகத்தில் அணிவகுத்து வந்த காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குழந்தைகளின் அழகிய அலங்காரம் மற்றும் தத்ரூபமான கிருஷ்ணர், ராதை வேடங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
மாறுவேடப் போட்டிக்கு மதுரை சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் நடுவராக கலந்து கொண்டு, சிறந்த கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்ட குழந்தைகளை தேர்வு செய்தார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரியத்தை குழந்தைகள் மூலம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இந்த மாறுவேடப் போட்டி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


















