'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை - பாதுகாப்பு மையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை ஆணையர் பரணிதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மேலும் அவர் கூறியிருப்பதாவது, ``தமிழக இந்து சமய அறிநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வருகைபுரியும் பக்தர்கள் 1-9-2026 அன்று முதல் செல்போன்கள் எடுத்துச் செல்வது தடைவிதிக்கப்பட உள்ளதால், செல்போன் எடுத்து வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச்செல்ல ஏதுவாக, திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களின் செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சுவாமி - அம்மன் தரிசனம் முடித்துவிட்டு திரும்பியவுடன் டோக்கன் காண்பித்து செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உத்தரவினை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச்செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















